அவனது பெயரில் வீரமிருக்கிறது..
பெயர் சொன்னாலே
கர்வம் கொள்கிறது..
பெண் முகத்தில் கூட
மீசை முளைக்கிறது..
அன்பும் கூட
அவனோடு ஒட்டியிருந்தது
அவனது புன்னகை போல..
அவனோடு தான்
நாங்கள் இருந்தோம்
எம் தேசத்தில்…
காவலோடும் கண்ணியத்தோடும்..
இன்று
யாரோ ஆள்வதாய்
எம் ஒற்றைப் பருக்கை
உணவைக் கூட அவர்களே
பிச்சையிடுவதாய் சொல்கிறார்கள்..
அதிகாரங்களும் ஆயுதங்களும்
நம்மை ஆள்கிறது..
விகாரைகளும் அரசமரங்களும்
பெருகுகிறது..
போர் தின்று துப்பிய
எச்சங்களாய் நாம்
காக்கைக் கூட்டம் போல
அவர்கள்…
இருந்தும்
கனவுகள் சுமக்கின்றோம்
எங்களிடம் மிச்சமிருக்கும்
சுதந்திர உணர்வுகளின் மீது
கனவுகளைக் கட்டியெழுப்புகிறோம்..
தலைவனில்லா தேசத்தின்
தலைவனைத் தேடுகிறோம்..
மந்திரங்களின் உச்சாடனம்போல
அவன் பெயரையே மௌனமாய் உச்சரிக்கின்றோம்…
எத்தனையோ வீரர்களை
தமிழர்களை
மரணம் எடுத்துச் சென்றாலும்..
அவன் பெயரை கடைசித்தமிழன்
இருக்கும் வரை
உலகிற்கு எடுத்துச் சொல்வான்..
அது வெறும் பெயரல்ல தமிழனின்
தன்மான உணர்வு…
காலத்துயரின் பெரு மௌனம்
கவிழ்கிறது மனங்களில்..
இங்கு ஏதுமற்ற வாழ்வில்..
வாருவாய் தலைவா
தலைமுறை தழைக்க……
சங்கரி சிவகணேசன்