முடிவல்ல தொடக்கம் என முறையே நடை பயில்வோம்
அறிவை அங்கே கொலுவிருத்தி
அறம் தனை நிலை நிறுத்தி
வீரம் விண்ணில் கொடி ஏற்றி
ஈழமதை ஒருவன் ஆண்டிருந்தான்
சோழன் அங்கே அரசிருந்து
சொர்க்க நகர் வாசல் வந்து
சூழ்ந்த துயர் துன்பத்தை
சூறையென எதிர் கொண்டான்
சிறு நரிகள் சூழ்ந்து நின்ற
சிங்களக் காட்டிடையே
வென்று வந்து நாம் எல்லாம்
சிறுத்தையென காட்டியவன்
பாறையிலும் நீர் சுரக்கும்
கோடையிலும் நிலம் குளிரும்
வீசு தென்றல் காற்று எல்லாம்
வேழமவன் கால் பணியும்
தடை கோடி வலம் வரினும்
தாள் பணியாப் பூமியது
நடை பயின்ற நம் மண்ணில்
விடை பயின்ற சாமியது
அடிமைத் தளை உடைத்து
அழகாய் ஆண்டிருக்க
நரிகள் படையெடுத்து
நம் நிலத்தை எரித்தனவே
இந்தியம் சீனம் என்று
உலகின் படைகள் எல்லாம்
ஆரியத்தை வளர்த்து விட
எம் வீரியத்தை அழித்தனவே
அறம் ஓங்கி நின்ற மண்ணை
அழிக்கும் எண்ணம் உரு கொள்ள
சன்னம் சனம் துளைத்து
அதன் எண்ணங்கள் தீர்த்ததுவே
சிங்களக் காடையர்கள்
சிதைக்கும் நம் மண்ணை
சிதை மீட்கப் புலி வீரம்
சன்னதங்கள் ஆடியதே
மக்கள் தனைக் கொன்று
மலை போல் குவித்து விட
அதைப் பார்த்த புலித்தலைமை
ஆயுதத்தை இறக்கியதே
அங்கே பார் …..
எரியும் பெரு நெருப்பில்
எரிகிறது தமிழீழம்
விடியும் என நம்பி நின்ற
விடுதலையும் எரிகிறது
ஓய்ந்த போர் ஒரு போதும்
ஓய்ந்தே கிடக்காது
காய்ந்த நிலம் ஒரு போதும்
காய்ந்தே கிடக்காது.
மழை வீழும் மண் குளிரும்
மயில் நின்று நடம் புரியும்
புலி வீரம் நடந்த கால்த்தடம்
எல்லாம் நெருப்பெரியும்..
முடிவுற்ற முள்ளி நிலம்
முடங்கியே போகாது
அழிவுற்ற தமிழர் நிலம்
அடங்கியே சாகாது
முடிவல்ல வைத்த புள்ளி
தொடக்கம் என உயிர் கொள்வோம்
மே பதினெட்டில் உறுதி கொண்டு
பாதையினை சரி செய்வோம் ..
…கவிப்புயல் சரண்…