தமிழீழத்தில் அவசர அவசரமாகப் போடப்பட்ட ஓடுபாதை….
பற்றைக்காடுகளை வெட்டி,பனையோலைகளை வெட்டி அடுக்கி,களிமண்போட்டு அதற்குமேல் கிரவல் பரப்பி மூன்று நாட்களில் அமைக்கப்பட்ட ஓடுபாதை அது.
ரூபனும்,சிரித்திரனும் கூடவே போராளிகளுடன்,தமது சாவுக்கு இங்கிருந்துதான் சிறகுவிரித்துப் பறக்கப்போகிறோமெனத் தெரிந்துகொண்டு ஓடுபாதையமைப்பதில் மண்வெட்டியுடன் நின்று கிரவல் பரப்பினர்.அவர்களுக்கு நிச்சயம் தெரியும் இது தமது இனத்திற்கான இறுதி அர்ப்பணிப்பாக இருக்கிப்போகிறது என்பது.இன்னும் பல அர்ப்பணிப்புகளை தமிழினத்திற்கு செய்வதற்கு தமக்கு சந்தர்ப்பம் கிடைக்கப்போவதில்லையே என்கிற கவலைமட்டுமே அவர்கள் இருவருக்குள்ளும்…..!
எதிரியின் எறிகணைத்தாக்குதலால் ஓடுபாதையில் குழிகள்.விமானத்தை சரிபார்த்துவிட்டு விடைபெற்று ஏறினார்கள்,விமானம் பறப்பதற்கு தயாரானபோதும்கூட ஓடுபாதையின் குழிகளை நிரவிக்கொண்டிருந்தனர் போராளிகள்.ஓடுபாதையின் இரு பக்கமும் மின்விளக்குகள் இருக்கவில்லை.பதிலாக இருபக்கமும் போராளிகள் படுத்திருந்து ரோச்லைற் வெளிச்சத்தால் சைகைகொடுக்க ரூபனும்,சிரித்திரனும் தமது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தனர்.
எதிரியின் அத்தனை கண்காணிப்பு வலயங்களின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு சிங்களத் தலைநகர் கொழும்பின் வான்பரப்பில் தாழப்பறந்து குண்டுத்தாக்குதலை நடத்த தொடங்கியிருந்தனர்.
மகிந்தவும்,கோத்தாவும் அலரிமாளிகையின் பாதாள அறைக்குள் சென்று ஒளிந்துகொண்டனர்.
சுமார் இருபது நிமிடங்களுக்கும் மேலாக கொழும்பை கதிகலங்க வைத்துக்கொண்டிருந்தது புலிகளின் குண்டுவீச்சு விமானங்கள்.
தாக்குதலுக்கு தெரிவுசெய்யப்பட்ட தளங்களாக இலங்கையின் அதியுச்ச பாதுகாப்பு தளமான இலங்கையின் இராணுவத் தலைமையகமும்,
இலங்கையின் சர்வதேச விமானத்தளமான கட்டுநாயக்காவின் விமானப்படையின் தலைமையகமுமே இலக்குகளாயிருந்தன.அச்சத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட கொழும்பே இருளில் மூழ்கி அச்சத்தில் உறைந்திருந்தது.
கட்டளைகொடுக்கவேண்டிய கட்டுப்பாட்டு தலைமையகம் கட்டுப்பாட்டை இழந்து இருளில் மூழ்கியது.
குண்டுகளை போட்டுவிட்டு எதிரியின் தளத்திற்குள் மோதி விழுந்தன விமானங்கள்.நீலப்புலிகளாக தேசியத் தலைவரால் விருதுபெற்றிருந்த கேணல் ரூபனும் லெப் கேணல் சிரித்திரனும் தமிழர் வரலாற்றில் முதல் வான்கரும்புலிகளாகத் தடம்பதித்துக்கொண்டனர்.
தமிழனின் வீரத்தை எங்குசென்று காட்டவேண்டுமோ அங்கு மிகப்பலமாக காட்டிவிட்டு இறுதிப்போரின் மறக்கமுடியாத வான்தாக்குதலாக சிங்களத்தின் இதயத்தில் ஏறிக்குத்திவிட்டு,உலகிற்கும் ஓங்கியொரு செய்தியை உரக்கச் சொல்லிவிட்டுச் சரிந்துகிடந்தனர் வான்கரும்புலிகள்.
நினைவுகளுடன்…..