சொல்லி அழவே முடியல..
முள்ளி வாய்க்கால் நினைவுகளை
நெஞ்சில் அணைக்க முடியலையே!
தள்ளிப் போகும் வருடங்களை
தாவிப்பிடிக்க வழியில்லையே!
எங்கள் தேசத்தில் குண்டு மழை!
பிஞ்சு சிதறியது அன்று பல
கண்கள் இருண்டதே அந்த நிலை
தாங்க முடியல இன்று அதை
தாகம் பெருகிட ஓடினோம் -குருதி
சாயம் கலந்திட வாடினோம்
வேகம் குறைந்திட வாடினோம் -இறுதி
மூச்சில் உயிர்த்திட ஏங்கினோம்
யாரும் வரவில்லை அன்றுமே! எங்கள்
வேட்க்கை தணிக்கல என்றுமே!
சீறும் குருதியில் நின்றுமே! – துயர்
தாங்கி நடந்தோமே அன்றுமே!
மீண்ட உறவுகள் இங்குமே! – ஏன்
வலி தாங்கி நடக்குது பாருமே!
ஆண்ட பரம்பரை நாங்களே! -நல்
வாழ்வு நிலை செய்வோம் வாருமே!
வீழ்வோம் என்பது இனி இல்லையே!
இறுதி மூச்சில் எழுவது உண்மையே!
ஆள்வோம் என்பது எம் எல்லையே!
உறுதி பாய்ச்சி நிமிர்வது எண்ணமே!
வலிக்கும் வரிகளுடன்
தே.பிரியன்