முரண்…!
இது கவிதை அல்ல காலம் தந்த வசனம்
எங்கள் இன வலிகளும் எனது வரிகளுமே
இவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள்
களவாடிக் கொள்ள வேண்டாம்
அடக்கு முறை இருக்கும்
வரை அறம் எழுந்து எதிர்த்தே தீரும்
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
நாங்கள் நாங்களாகவே இருக்கிறோம்
விடியாத இரவுகள் பல எம்மிடம் உண்டு
அதற்காக விடியலை விரும்பாதவர்கள்
என்று பொருள் அல்ல
முடியாத வலி சுமந்தவர்கள் நாங்கள்
விரைவில் முடியும் எம் வலிகள்
எம் வலிகளை யாரும்
விலை பேசி விட வேண்டாம்
அவை இனத்திற்கானவை கனதியானவை
விட்டு கொடுப்புக்கும் விடுதலைக்கும்
முடிச்சு போடுவது முட்டாள்த் தனம்
அடிமைகள் எனும் சொல்லை அகராதியில் இருந்தே அகற்றிய இனம்
எங்களை அடிமைகள் ஆக்குவது மிகவும் கடினமான விடயம்
எமது வீரம் மொழியை விஞ்சியது
மொழி வீரத்தை விஞ்சியது
இருப்பினும் காலத்தின் கோலமே எங்களுக்கு
கடின பாதையை காட்டியது
எங்கள் வலிகளும் ரணமும் நிறைந்த பாதையில் உங்கள் உல்லாசம் இன்று
பார்வையாளர் எனும் போர்வைக்குள்
நீங்கள் தினம்தினம் வந்து போகிறீர்கள்
எங்கள் வலிகள் பற்றிய எண்ணம்
எள்ளளவும் உங்களுக்கு இல்லை
எண்ணுங்கள் என்று குறிப்பிடவும் இல்லை
ஏன் என்றால்
சொந்த மக்களை அழித்த நாடு எனும் பட்டியலில் உங்களுக்கே முதலிடம்
சகோதர இனம் என்ற அந்த உணர்வு கூட உங்களிடம் இல்லை
மறப்போம் மன்னிப்போம் என்று கூறியதும் மறந்து விட்டு கை கோர்க்க எப்படி முடியும்
எப்படி ஏற்று வாழ்வது நீங்கள்
தந்த வலிகளை
வலிகள் என்பதை விட நீங்கள் எமக்கு
தந்த வதைகள் என்றே கூற வேண்டும்
எதனை? எப்படி? எங்கே? எப்போது? ஏன் ?
இவை கேள்விகள் அல்ல ரணங்கள்
மன்னிப்பது சுலபம் மறப்பது கடினம்
உங்களிடம் ஒரு கேள்வி கேட்கின்றோம்
பதில் உங்களிடமும் இல்லை என்பது தெரிந்தும்
எதனை மறப்பது????????
1)குல கொழுந்துகளை குப்பையில்
எறிந்தோமே அதனை மறப்பதா?
2)உடலில் உயிரை விட சில உறுப்புகளை
இழந்தோம் அதனை மறப்பதா?
3) உடைமைகள் கோடி இழந்தோம்
அதனை மறப்பதா
4) உயிர்களை விலை கொடுத்தோமே
அதனை மறப்பதா
5) பாலுக்கு பாலகன் அழுதிடும் நேரம்
தாயவள் இறந்த சோகம் மறப்பதா
6) கொத்து கொத்தாய் மக்களை
புதைத்தாமே அதனை மறப்பதா
7) பதுங்கு குழிகளில் பதுங்கிய
நினைவுகள் மறப்பதா
8)எம் குல பெண்களை சிங்களச் சிப்பாய்
சிதைத்ததை மறப்பதா
9) வெட்டிய குழிகளில் ஒட்டு துணியின்றி
உயிருடன் புதைத்ததை மறப்பதா
10) வெள்ளை கொடிகளை ரத்தத்தில்
நனைத்த துரோகம் மறப்பதா
இப்போது கூறுங்கள் எதனை மறப்பது
இன்னும் உண்டு எங்கள் வலிகள்
எழுதும் போதே கலங்கும் விழிகள்
நீங்கள் மறந்தது சிலவற்றை நினைவு படுத்துவதும் கடமை
உங்கள் போர் விமானம் எங்கள்
பாடசாலை மீதும் குண்டுகள் வீசியது மறந்து விட்டீர்களா
கோவில்கள் தேவாலயம் மீதும் தாக்குதல்
நடந்தது மறந்து விட்டீர்களா
இனம் சிதைந்த படங்கள் தொலைக்காட்சி
மூலம் கண்டு களித்தீர்களே அதை மறந்து
விட்டீர்களா
எங்கள் சிறுவர்கள் வைத்தியசாலையில்
பட்ட அவலம் கண்டு உலகே அழுதது அதனை மறந்து விட்டீர்களா
எங்களை அழிக்கும் ஓர்மத்தின்
உச்சம் உங்கள் அரசு காட்டியது
அதனை மறந்து விட்டீர்களா
போர் வெற்றி என்று பொங்கியது
உங்கள் இனம் அதனை
மறந்து விட்டீர்களா
ஒரு இனம் அழிய மறு இனம் வாழ்தல்
என்பது காட்டுக்கு மட்டுமே பொருத்தம் ஆகும்
உங்கள் பக்கம் மட்டும் பார்க்க வேண்டாம்
எமக்கும் ஒரு பக்கம் உண்டு ..
சம தேசத்தில் சம வல்லமை
கொண்டு நின்ற இனம் நாங்கள்
இருளில் நாங்கள் மறைந்து இருந்தால்
விடிவு எங்களுக்கும் முடிந்து இருக்கும்
பயங்கர வாதிகள் முத்திரை குற்றப்பட்டும்
உங்கள் இனம் மீது தாக்குதல் நடத்தவில்லை
அதுவே எங்கள் அறம்
அதுவே மனு தர்மம்
வெற்றி உங்களுக்கு எனினும்
அதில் திருப்தி எங்களுக்கே
திருப்பி அடிக்க முடியாது ஒதுங்கவில்லை
அடிக்க கூடாது என்பதே கொள்கை
இனம் இனத்தை அழித்த வரலாறு
விரும்பாது தான் ஒதுங்கி கொண்டோம்
அதனை செய்து மகிழ்ந்தது நீங்களே..
உங்கள் முடிவுகள் சரியானது என்றால் எங்கள் வலிகள் கனமானவை
ஒரு போதும் காற்று ஒரு பக்கம் வீசுவதில்லை
உணர்ந்து கொள் நண்பா
உண்மைகள் கலங்குவதில்லை
வன்னி மண் நினைத்து இருந்தால்
வரிசையில் கொன்று இருக்கும் உங்களை
எதிரி வேறு இனம் வேறு எனும்
எண்ணமே இருந்தமையால்
உங்கள் தலைகள் தப்பி கொண்டது
எங்களுக்காய் இரக்கப்பட சொல்லவில்லை
அப்படி ஒரு பக்கம் உங்களுக்கும் இல்லை
உணர்வை மதியுங்கள்
உரிமை கொடுங்கள்
உறவை பலமாக்குங்கள்
எங்கள் வலிகளை சீண்டாதீர்கள்
ரணங்களை ஆற விடுங்கள்
கால சக்கரத்தில் எங்களுக்கு என்றும் ஒரு நாள் ஒதுக்க பட்டு உள்ளது
மறந்து விடாதீர்கள் அந்த நாளை
அந்த நாளில் எங்கள்
வீரத்தின் வேர்கள் எமக்குஉரிய அந்த பாதையை செப்பனிடும்
அப்போது நாங்களும் எங்கள் பாதையில்
உல்லாச பயணிகளே……………
………கவிப்புயல் சரண்………..