இனத்தையே பாடையிலேற்றி..
கொழுத்திய பின்னும்..
எழுந்து நிற்கிறோம்..
எரிந்த சாம்பலில்
எஞ்சியவர்கள் நாங்கள்..
குற்றுயிரும் கொலையுயிருமாய்
குவிக்கப்பட்ட குவியலிலிருந்து
கொஞ்சமாய் மீண்டு
உயிர்த்தவர்கள் நாங்கள்..
நந்திக் கடலேரியில்
நாதியற்றவர்களாய்
மிதந்தவர்களின் மிச்சம்
நாங்கள்..
முள்ளிவாய்க்காலில்
எங்களின் குருதியாறு பாய
கொட்டும் குண்டுகளோடு
தீக்குளித்தேறியவர்கள்
நாங்கள்
உற்றாரை
பற்றிய கைகளோடு
பறிகொடுத்தவர்கள் நாங்கள்
நின்ற இடத்தில்
கால்களை விட்டுவிட்டு
நினைக்கா ஓரிடத்தில்
இழுத்துப் போடப்பட்டவர்கள் நாங்கள்
ஆலாயிருந்து
அலைத் துரும்பாய்
அடித்துப் போடப்பட்டவர்கள் நாங்கள்
பெற்றோர்களை
பெற்ற பிள்ளைகளை
அண்ணன் அக்கா
அன்புறவுகளை இழந்தும்
மிச்சமாய் வந்தவர்கள் நாங்கள்
இனத்தையே கொளுத்தியவன் முன்
இன்னும் உயிரோடு
இருக்கிறோம் நாங்கள்..
எங்கள்
கண்ணீரில் எரிகின்றன
கண்களின் தீபங்கள்..
நெருப்பாய் நினைவுகள்…
அழுது அணைந்திடாமல்
அழுதும் எரிகின்றன
தீபந்தங்களாய்…
எம் இருப்பை..
மீண்டும் மீண்டும்..
நெருப்பாய் உறுதிப்படுத்துகிறோம்..
மாண்ட உயிர்களுக்காய்..
ஒரு நிமிடம் தீபங்களேற்றி..
அஞ்சலிக்கிறோம்..
வலிகள்…. கண்ணீராகவல்ல..
தீப்பிழம்புகளாக வெளிவரட்டும்.
-நிறஞ்சன்-