இனம் அழித்த நந்திக் கடல்...!
பிணம் கோடி சுமந்தெங்கள்
சனம் அழித்த கடலே.
தினம் உந்தன் அருகேறும்
பிண வாடை நிதமே.
தாய் என்று கடல் உன்னை
பலமாக்கி கொண்டோம்
மகவெங்கள் உயிர் தின்ற
உனை என்று மறப்போம்
போருக்கு பின் வாங்காப்
புனிதத்து பூமி
யாருக்கும் குறை இல்லாத்
தமிழர் தம் சாமி
சிவனேறும் விடை தன்னின்
பெயர் கொண்டு நின்றாய்
எமனேறும் கடலாக ஏன்
மாற்றம் கொண்டாய்
களங்கத்தின் மறு உருவம்
கடலென்றும் சொல்வோம்
வளம் தந்து எமைக் காத்த
படகேறிச் செல்வோம்.
வென்றாகித் தமிழ் எம்மை
தினம் ஆள வேண்டும்
கொன்றாகிப் பகை தன்னை
வென்றாட வேண்டும்.
வரம் தந்து வழி செய்தால்
குறை இன்றிப் போகும்
உரம் எங்கள் போருக்கு
கடல் என்று ஆகும்..
.......கவிப்புயல் சரண்.......
Share this: