அறுத்து விடு முள் வேலியை…!
நாங்கள் நமக்கு என்று
ஆடிய போர் தோற்றது
உண்மையே
இனி உனக்கு என்றும்
ஒரு போர் ஆட வேண்டியது
எம் கடமையே
எண்ணிப் பார் …..
உன் தாயை
உன் தந்தையை
உன் அக்காவை
உன் அண்ணனை
சினம் விழிகளில் இருக்கும்
எவனுக்கும் இரவில்
தூக்கம் வருவதில்லை
கனவிலும் உன் கண்ணின்
ஏக்கமே தெரிகிறது .
வெற்றிக்கு பின்னால்
நாங்கள் ஓடியது
எல்லாம் விடுதலைக்கு
மேல் எங்கள் உயிர்விலை
சிறிது என்றே
உடலாலும் உள்ளத்தாலும்
உணர்வாலும் ஒன்றித்த
ஒரு கூட்டம் உனைக்
காக்க ஓடிக் கொண்டு இருந்தது
உன் கண் முன்னால்
தானே அவர்களின்
கால்கள் பிடுங்கப்பட்டது
கண்கள் தோண்டப்பட்டது
கைகள் விலங்கிடப்பட்டது
கற்பு பறிக்கப்பட்டது
ஏன் உனக்கு ….
அவர்கள் தலை சிதறக் குறி
வைக்கப் பட்டது தெரியாதா
கட்டிய கைகள் கட்டிய படியே இருக்க
காணவில்லையா அவர்களை
நீ விழித்து இருந்தாய் கண்டேன்
அதனால் உனக்கு வலிக்கும்
ஆனால்
மூடிய விழியுடன் சிலர் நின்றார்களே
அவர்களை நினைத்து பார்க்கிறேன்
வலியை ஏன் மீண்டும் மீண்டும் துண்டுகிறீர்கள் என்றார்கள்
கண் முன் நடந்த போது கண் மூடிய உங்களுக்கு எங்கள் வலி புரிய வைக்க
அவசியமும் இல்லை அவகாசமும் இல்லை
நீ அறு தங்கையே….
முள் வேலி தெறிக்கும் உன்
மூச்சு காற்று கண்டு …
வலிகளை தின்ற தேசத்தில்
திரட்டி கொள் உன் வலியை
அது உன் காயத்துக்கு மருந்தும் ஆகும்
ஓர் நாள் நமக்கு விருந்தும் ஆகும்
**கவிப்புயல் சரண்**