கறுப்பு நாட்குறிப்பு
ஓர் இனத்தின்
கனவு கலைந்த பெருங்காட்டை
கரும்புகை சூழ்ந்து கடக்கிறது
வீரம் விளைந்த மண்
வித்துடலாகக் கிடக்கிறது
உயிரறுந்த உடலங்களாலே
புற் றரைகளும்
பற்றைக் காடுகளும் – அந்தக் கடற்கரையும் பெரும் போர்வை போர்த்தியாயிற்று
உடலறுந்த உயிர்கள் கூட
இறுதித் தருணத்தை வேண்டி
அந்தரித்துத் துடித்தபடியே
மரணத்தின் விளிம்பிலும்
மரணத்தின் மடியிலும்
உயிர் ஊசலாடும் கொடிய நொடியே
அந்நாழிகையானது
மண் குடிசை வாழ்விடங்கள்
நேசப் பிராணிகளென யாவுமே
சாம்பல் மேடாகிப் போயின
ஒரு தேசத்தின் கண்ணீரையே
இன்னொரு தேசம் சூழ்ச்சியால்
சுவைத்துக்கொண்டிருக்கிறது
அநீதியின் கொடும் பற்கள் கீறி
நீதியின் தேவதைகள்
சிதைக்கப்பட்டிருக்கிறார்கள்
மூச்சற்றுப் போயிருக்கிறது
பெரு வீர காவியத்தின்
வரலாறும் அதன் தடயங்களும்
பேரவலம்
பெரும் பழி
பெரும் வலி
பெரும் சாபம்
பெருந் துன்பம்
பெருந் துரோகம்
இவைதான் அந்நாளில்
எம் இனத்திற்கு நிகழ்ந்தேறியது
அதோ பார்
கொழுந்து விட்டெரியும்
அத்தீயில் தெரிகிறது
தீரா சுதந்திர வேட்கையின் நிறம்!
– வேலணையூர் ரஜிந்தன்.