வலியே நிவாரணம் தேடும் வழியில் தமிழீழத் தாயவள்!
(தமிழீழத் தேசிய துக்க நாள் 2020 சிறப்பு கவிதை)
பூலோகத்தின்
சொர்க்கம் நான்….
பூகோளத்தின்
புதைகுழியும் நான்…
வன்னிக் காடுகள் போர்த்திய
விதவை நான்….
பிணி தீரா
பிரச்சனையும் நான்….
அழகென்றால் அல்லலும்
வளமென்றால் ஆக்கிரமிப்பும்
அனுபவித்து நான்
கற்றுக் கொண்டிருப்பவை!
பேரினவாத நாட்டின்
அடிமையும் நானே!
சுதந்திரக் காற்றுக்காய்
மூச்சுத் திணறும்
சுவாசமும் எனதே!
சுய குரலெழுப்பி
அடங்குவதற்குள்
குரல்வளைகள்
நெறிக்கப் படும் நெறிகளும்
எனக்கு!
என் மடியில்
நொங்குகள் குலையாய்
பறிக்கப்படுவதைப் போல்
என் பிள்ளைகள் உயிரும்
பறிக்கப் படுவது
சாதாரன நிகழ்வே!
என் வீட்டில் இராணுவம்
எப்போதும் நுழையலாம்
யாரையும் சிறை பிடிக்கலாம்
எந்தக் குற்றத்தையும்
எவர் மீதும் சுமத்தலாம்!
சிறுவர் படுகொலையும்
சின்ன விடயமே
வன்புணர்வுகள்
வாடிக்கையே!
விசாரணையென்று போனவர்கள்
வீடு திரும்பினால் ஆச்சரியம்
சில நேரம் பிணங்களாய்
எங்கேனும் கிடப்பார்கள்
பல நேரங்களில்
இருக்கிறார்களா?
இறந்தார்களா?
என்பதே நீளும் கேள்வியாய்…
கணவனின் நிலை தெரியாது
கண்ணீருடன் தவிக்கும் பெண்கள்
வாழாவெட்டியாய்,
விதவைகளாய் வடிக்கும்
கண்ணீரில் நான்
கரைந்து கொண்டிருக்கிறேன்!
பிணங்களை விதைத்து
விதவைகளை காவல் வைக்கும்
கழனியாய் நான்!
துரோகத்தாலும் வஞ்சகத்தாலும்
சுயநலத்தாலும் அடிமைப்பட்டது
என் சுதந்திரம்
தமிழின் இதய துடிப்பும் நான்
இதய குமுறலும் நான்!
வலியே
நிவாரணம் தேடும்
வழியில் நான்!
என் பிள்ளைகள்
சவப்பெட்டிக்குள்
ஆணி அடிப்பதோ
அணிதிரளும் சிங்கள பேரினவாதம்!
அடிக்கச் சொல்வது
இனத் துரோக கூட்டம்!
முள்ளிவாய்க்கால் படுகொலையோடு உலக
அரங்கில் உயிர் வாழும் ஊமையும் நான்…
நந்திக்கடல் நீரோடைகளில்
குருதியோட்டம்
காண்டதும் நான்
வீரத்தை வட்டுவாகல் பாலத்தோடு
வீசி எறிந்து விட்டு பதினொரு ஆண்டுகளாக
கோழையாய் திரிவதும் நான்
நந்திக்கடல் கோட்பாடும் நான்
பிரபாகரனியமும் நான்
21ஆம் நூற்றாண்டின்
விடுதலைக் குறியீடும் நான்!
நான்
மாவீரர்களின் தேசம்
மாவீரம் தொலைத்து
தலைமகனை காணாது தவிக்கும்
கண்ணில் நீர் வற்றி
நாவறண்டு இறந்து கொண்டிருக்கும்
தமிழீழ தாய்
-ஈழம் புகழ் மாறன்-