மாறாத வடு சுமந்த நாள் மே பதினெட்டு
உயிர்கள் அடங்கிய
ஒற்றை மணித்துளியும்
உயிர் ஓலம் அடங்காத
அந்த நீல கடற்கரையும்
இரத்தத்தில் சிவந்தது
பிறக்கும் போதே சாவெழுதிய மண்
எங்கள் நிலை மாற ஏந்திய ஆயுதம்
எங்கள் நிலம் பறிக்க வந்தது
உலகத்தின் பயங்கரம்
கூடி வாழ்ந்த தமிழன் அழிந்தான்
கேட்பார் இன்றி
உயிர் மடிந்த தேசத்தில்
வலி என்று தீருமோ
வலி சுமந்த மண்ணின்
வாழ்வென்று மாறும்
நாம் அழுத கண்ணீரும்
கடலோடு சேர்ந்தது
சந்தன காற்றிலும்
கந்தகம் கலந்து
பூக்களும் உதிர்ந்து
மண்ணோடு வீழ்ந்தது
கூடி வாழ்ந்த குருவி கூட்டில்
கல்லெறிந்து போல
குண்டு போட்டு எம்
உறவுகளை கொன்றான்
எமனும் அழுத்திருப்பான்
எங்கள் இனத்தின் சாவு கண்டு
எப்படி தீரும் எங்களின் அவலம்
எப்போது மாறும் எங்கள்
வாழ்வின் தாகம்
இரத்த கரை படிந்து போனது
பூமித்தாயின் முகம்
எத்தனை உடல்களை
சுமந்தது அந்த நீல கடலின் கரை
உற்று பார்த்த உலகமும்
குருடாக கிடந்தது
எம்மினத்தின் ஓலம் கேட்டும்
உலகங்கள் செவிசாய்க்கவில்லை
கொத்து கொத்தாய் மடிந்தோம்
இலையுதிர் காலத்தில் வீழ்ந்த
சருகுகள் போலவே மண்ணிலே
நாங்கள் புதைந்தோம்
கேட்பார் இன்றியே தேசம் அழுதது
நினைவுகள் அழியாத தேசமே
எங்கள் நிம்மதி வாழ்வினை தேடியே
மடிந்தது பல உயிர்கள் தான்
வற்றாத கண்ணீராய்
இன்றும் வடிந்து கொண்டே
இருக்கிறது விழிகளில்
மடிந்த எங்கள் உறவுகளையும்
தொலைந்த எங்கள் வாழ்வியலையும் எண்ணி
சிவா TE