மே-18
நீலக் கதிர் கோதி
வானத்தாய் மடி சாய்ந்து
வாடிக்கிடக்கிறாள்
நீலக்கடல் நந்தி ஊரே கூடி
ஒப்பாரி அலைகேட்டும் உள்ளுக்குள் ஊமையானவள்
தூணாய் கரை சாய்ந்து
கோபுரமும் கூடாரமுமாய்
கூக்குரலில் காதடைத்தாளோ
மஞ்சள் சிவப்புத்தோரணத்தால்
கெஞ்சிக்கேட்ட உயிர் பிண்டங்களின்
நெஞ்சறை இரத்தம் காவி
உப்புக்காற்றில் ஊமையாய் பறக்கிறாள்
உயரப்பறந்த பருந்தின் பாதம் முறிந்ததாய்
மனம் வருந்தும்
உயிர் பிளிரும்
அதிகாரப் பேரினத்தின்
அவலங்களும் அடிமைகளும்
குறை குடத்தை நிரப்ப
கூட்டமாகியதோ?
எரிகின்ற விளக்கின் வலிமையாய்
தமிழ் மனங்கள் எரிகிறது
எப்போதும் கண்ணீர்கள் தான்
சொரிகிறது
தூசி தட்டவும் துணைக்கு வராத
எம் இனத் தேசத்துரோகம்
சுடரேற்ற வருகிறது
பாவம் முள்ளிவாய்க்கால்
புனிதர்கள் மாண்ட மணலில்
தமிழை மீண்டும்
புதைக்கவா புதுவேடம்
பூண்டு வருகின்றனர்
ஆண்டுகள் பல மாண்டு போனாலும்
அவனியில் நாம் சொரிந்த
செங்குருதிகள்
ஏதோ ஓர் அவாவில்
மே-பதினெட்டை
மீட்டுக்கொண்டே இருக்கும்
கடைசித் தமிழனின்
கல்லறை வரை……….
✍முல்லைக் கவிஞன் சாரு—-