முள்ளிவாய்க்கால் வெறுமனே
ஒற்றைச் சொல்லில் தொடங்கும் பெயரல்ல
ஒரு இனத்தின் இரத்தத்தில் எழுதப்பட்ட வரலாறு
மூச்சுத் திணறுகிறது
முள்ளி வாய்க்கால்
முனைகள் எங்கும்
முடிவில்லாத பயணத்தின்
வீதியெங்கும் வித்துடல்கள்
விதைந்தே கிடக்கிறது
பச்சிளம் குழந்தைகள்
படுத்துறங்கிய தொட்டில்
கிழிந்தபோது
தாயூட்டிய பால்
இரத்த ஆறாகிப் பாய்ந்தது
பிணங்களின் மேல் பிணங்கள்
ஒற்றைத் துணி இல்லாத
உடல்களாகி சிதைந்து
ஊனம் உயிராவியாக வடிந்தது
பதுங்கு குழியில் நாமிருக்க
புதை குழியில் புதைந்த பிணங்கள்
புழுப் பிடித்து துடித்தது
குடியிருந்த வீட்டில்
குண்டு மழை பொழிந்து
தாய் உடல் சிதைகையில்
மிகுதி உடலை தூக்கிக்கொண்டு
தந்தை ஓடும் போது
தந்தை உடல் சிதைவதை கண்ட
என் விழிகள் கண்ணீர் விட்டுக் கதறியதே
செந்தூரன் சிலையடியில்
சிறையிருப்பானதுவே உயிர்கள் பல
தென்றல் காற்றும்
தென்னைமரத்தோடு பேசுகையில்
வானில் ஒரு சத்தம்
விடியளை நோக்கிய அந்த நாள்
மடிந்ததுவே பல்லாயிர மழலைகள்
புது மாத்தலன் வைத்தியசாலையில் இடமில்லையென்று
தெருக்களின் ஓரங்களில்
படுக்க வைத்தனர்
போர்வைகளால் போர்த்தி
போர் வீரர்களை
ஓ என் கணவன் இதுவா
இல்லை அதுவா என
துடித்து துடித்து
மார்பில் அடித்து அடித்து
மண்ணை வாரித் தூவி
புரண்டு உருண்டு
வயிற்றில் கருவோடு
வலியோடு உயிரை விட்டனர்
அந்த நொடியில் எத்தனை பேர்கள்
மறந்திடமுடிந்திடுமா
இன்று நடை பாதையில்
பிண வாடைகள்
அநாதைகளின் ஆழுகைகள்
விதவைகளின் வித்துடல்கள்
என வீதி எங்கும் இரத்த
ஆறாகி ஆறாத வடுவாகி
நெஞ்சம் வலிக்கிறதே
நாட்டில் யுத்தங்கள் முடிந்தாலும்
வீட்டில் சத்தங்கள் ஓயவில்லை
ஒவ்வொருவர் உதடுகளும்
விம்மி விம்மித் துடிக்கிறது இன்று
இரத்த வாடை காய்ந்து போனாலும்
ஈழமுகாங்களின் வாசல்கள்
இன்றும் திறந்தே இருக்கிறது
நந்திக் கடல் எங்கும் நீந்தும்
பிணங்களின் உணர்வுகள் நீதி கேட்கிறது
காதலும் கனவும்
மண்மீது கொண்டோம்
காவியம் ஒன்றுதான்
எங்கள் எல்லைகள் என்றோம்
தாகமும் வேகமும்
கொள்கை என்றோம்
தீயினில் கருவாகி
தீமையை வென்றோம்
போரினில் புலியாகி
புத்துயிர் பெற்றோம்
பூக்களின் மென்மையாய்
பண்பினைக் கொண்டோம்
கொத்துக் கொத்தாக
செத்தொடிந்து போனோம்
நித்தம் நித்தமாய்
கண்ணீரில் குளித்தோம்
ஒடிந்து வீழ்ந்து
உருக்குலைந்து போனோம்
உறவுகள் இல்லாத
அநாதைகள் ஆனோம்
உரிமையைப் பறித்து
உணர்வினைக் கிழித்து
உண்மையை எரித்து
உடலோடு வாழும் நாம்
வலி சுமந்த இனம் தான்
மானம் இழந்த இனம் அல்ல
மற வீரமும் தாகமும்
என்றும் மாறாத ஒன்று தான்
வலிகளுடன்
வன்னியூர் கிறுக்கன்