தீரா ரணங்கள்…
மூச்சு நின்ற தேசத்தின்
முனகல் ஒலி கேட்கிறது!
காலத்தின் வலிகள் கண்டு
வானம் கண்ணீர் வடிக்கிறது!
வெட்டிச் சாய்த்த மரங்களும்
வேரில் கனவு சுமக்கிறது!
ஆறாத வடுக்கள் எல்லாம்
அடி மனதைத் துளைக்கிறது!
உடமைகள் அழிந்து போக
உறவுகள் இறந்து வீழ
கண்முன்னே தீயும் சூழ
உயிர் வலித்த கொடூர நாட்கள்..
குருதியாறு பாய்ந்து ஓட
கந்தகப் புகை சூழ்ந்து மேவ
உயிர்கள் பலி கண்ட நிலம்
எப்படித்தான் மறந்து போகும்..
வான்முகிலும் நீள் கடலும்
வனாந்தரமும் வரம்புகளும்
என்றைக்கும் சாட்சிகளாய்
பேச்சற்றுத்தான் தவிக்கிறது!
தீராத ரணங்களுக்குள்
கட்டுண்டு கிடக்கும் காலம்
என்றோ ஒரு புலர்வுக்காக
காத்திருக்கும் தாய்மண் தாகம்!
– வேலணையூர் ரஜிந்தன்.
16.05.2020