முள்ளிவாய்க்காலும் மே பதினெட்டும்
இலங்கை தீவிலிருந்தும் உலக அரங்கத்திலும் பேசு பொருளாய் இருந்த பெரும் தேசத்தின் இறுதிப் புதை குழிக்குள்
இருந்து எழும் ஓர் ஆன்மத்தின் மடல்….
விரைந்து கொண்டிருந்த தேசப் பயணத்தில்
விதையாகி வீழ்ந்தவர்க்கு முதல் வணக்கம்
நிரைநிரை படை திரட்டி எதிரி நித்திரை கலைத்த தேசத் தலைமைக்கும் வணக்கம்
எதிரி வழி செல்லாது எம் சாவு எம் கையில் என்று எங்களை நோக்கி வந்த அத்தனை உடலுக்கும் உறவுக்கும் உணர்வுக்கும் வணக்கம்
வணக்கத்தை கூறி உங்களை வாசலுடன்
வழியனுப்ப ஆசை இல்லை எனக்கு
உடல் உக்கி உணர்வு உக்கா உரிமையில் எழுதுகிறேன்
சிதை கொண்ட மண் நெடுங்காலம் பகை தாங்குவதில்லை
விதை வீழ்ந்த நொடி முளை கொள்ளும் வரை அது தூங்குவதில்லை
உங்களில் சிலர் எங்கள் இறுதி நாட்களை இன்று தான் எண்ணி பார்க்கிறீர்கள்
எங்களின் வலிகளை உங்களின் அரசியல்
ஆளுமை ஆக்கிச்சிரிக்கிறீர்கள்
உங்களைப் போலவே ஓடித் திரிந்தவன்
உறவைக் காவியே உடலும் மெலிந்தவன்
காப்பரண் வெட்டியே கடுகாய் தேய்ந்தவன்
இறகு பிய்ந்த பறவையாய் வீழ்ந்தவன்
ஒரு இனத்தின் இறுதிப் புதைகுழியில் உறங்கி கொண்டு இருப்பது எனக்கு பெருமை தான்
ஆனால்
நினைத்து பார்க்கவே நேரம் மறந்த உமக்காய் உறங்கி கொண்டோமே,,, சீ,,,,
வித்துடல் தனை தூக்கி வீதிவழி வரும் போது
செல்லடித்து செத்தவரை மறந்தீரே
பள்ளி விட்டு பசியோடு பாதி வழி வந்த பிள்ளை நாதியாய் கிடந்தானே
பிரசவிக்க ஏங்கி நின்ற பெறு மாதத்தாயவளின் பிள்ளை உடல் எரித்தோமே
தோள் சுமந்த தந்தை உடல் உனை சுமந்த தாயின் உயிர்பகை கணையில் பாதிஎன்று ஆனதுவே
பொத்தி பொத்தி வளர்த்த கோழிக்குஞ்சுகள்
செத்து செத்து விழுந்தனரே
எப்படி மறந்தீர்கள்
வேற்றினம் உம்மை பற்றி பேசிடும்
வார்த்தை எல்லாம் உங்கள் செயல் பாடு தான்
அமைதியாய் அகம் உடைத்து அழுது வாருங்கள்
சுடுமண் இன்று குளிர்ந்து கொள்ளட்டும்
இன்று ஒன்றாகுங்கள் இணைந்து கொள்ளுங்கள்
நிச்சயம் நாளை உங்கள் கேவலத்தை எழுதுகின்றேன் …….
கவிப்புயல் சரண்