உடைத்துக்கொண்டே இருங்கள்!
முள்ளிவாய்க்கால் முற்றத்தின்
நினைவுக் கற்களை
ஒவ்வொன்றாக நீங்கள்
உடைத்துக்கொண்டே இருங்கள்!
மீண்டும் மீண்டும் நீங்கள்
உடைக்க உடைக்கத்தான்
எங்கள் நினைவுகள்
கல்லிலும் உயிராய் எரிகிறது!
உங்களுக்கு அது
வெறும் கல்லாகத் தெரியலாம்
எங்களுக்கு அது
உயிர் வலியின் நினைவுகள்!
சாக்கடைச் சப்பாத்துகள்
மிதித்திட்ட மண்ணை காக்கவே
அன்று கொள்கையின் வழியில்
எங்கள் கைகள் ஆயுதம் ஏந்தின!
அட இன்னும் ஒன்றுபட்ட
இலங்கைக்குள் ஒன்றாய் வாழலாம்
என்று கவிதையும் கட்டுரையும்
எழுதுகிறவன் இருக்கதான் செய்கிறான்!
இரவோடு இரவாக கல்லுத்
திருடராய் வாருங்கள் – என்
நிலத்தை திருடியவர்கள் நீங்கள்
நினைவுகளையும் திருடிப் போங்கள்!
ஆனால் எங்கள் நினைவலைகள்
உங்களைத் தூங்கவிடாது
அது எழுப்பும் ஓலத்தில்
உங்கள் செவிப்பறைகள் கிழியும்!
காலத்துயரில் புயலாகிய
கனவுகள் புதைந்து கிடக்கிறது
எங்கள் நாடி நரம்புகளில்
சூடேற்றிக்கொண்டே வாருங்கள்!
அதிகாரத்தின் கைகள் ஓங்கி
செய்த கொலைக் குற்றங்கள்
தொடரும் இனப்படுகொலைகள்
எல்லாவற்றுக்கும் சாட்சிகள் தேவை!
உங்காளல் ஒன்றையும் ஏன்
விட்டு வைக்கமுடியவில்லை ?
ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து
உடைத்துக்கொண்டே இருங்கள்!
உங்களால் அடித்துடைக்கப்படும்
அதே கற்களில் இருந்தே
எங்கள் தேசம் நிமிரும்
ஒரு நாள் சொற்களில் நிறையும்!
-வசீகரன்
ஒசுலோ, நோர்வே
13.05.2021