மாவீரச்செல்வங்களை நெஞ்சில் சுமந்திடுவீர்!
(கார்த்திகை திங்கள் ஒன்று)
யுத்தமிட்டு நிலமதில் முத்தமிட்ட உயிர்கள்
சத்தமிட்ட ஒருசொல்
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
உறுதி கொண்ட தமிழர் நெஞ்சங்களின்
குருதிக் குடித்துச் சிவந்திட்டச் சரித்திரம்!
கண்ணில் தீவிழும் வலியினில் தினம் வெந்து
மண்ணில் சாயும் மரம்போல் உயிர்மாண்டு
விண்ணில் முழங்கும் இடியாய்ப் புரட்சியிலும்
எண்ணில் அடங்காத் தியாகத்திலும்
நாளை நிச்சையம் சுதந்திரம்!
கற்றை முகிலாய்ச் சூழ்ந்த இருள்தனை
தமிழ் மாவீர தீச்சுடர் கிழித்து
அற்றை நாள் தமிழ் மண்ணில்
புதைந்த விதைகளால்
நாளை தமிழீழமதில் புன்னகைப் பூக்கும்…
உடலின் நரம்பினில் திரித்தக் கயிற்றில்
உதிரம் நனைந்த சுவாசக் காற்றில்
உயர எழுந்து உணர்ச்சி அலைகளில்
உவகை நிறைந்து பறக்கிறது புலிக்கொடி…
மாவீர தியாகம்தனை வாசித்துப் பழகாதீர்கள்
நேசித்துப் பழகியே நெஞ்சம் நிறுத்துங்கள்
கார்த்திகை திங்களதில் கேலிக்கை தவிர்த்து
மாவீர செல்வங்களை நெஞ்சில் சுமந்திடுவீர்!
ஈழம் புகழ் மாறன்