வேர்கள் அசையுது காண்
பெரியனைப் பெற்றபொன் பேரெழில்தேசெம்
பொலிவின்றிக்கிடக்குது காண்!
பேருண்மை ஒளியை மறைத்துக்கிடந்தே
பூதங்கள் நடக்குது காண்!
சிறுநரிக்கூட்டங்கள் செய்தசெயல்களால்
சிரிப்பின்றிக்கிடக்குது காண்!
சீற்றங்கொண்டிடச் சிறுத்தையும் அங்கில்லைச் சினமின்றிக்கிடக்குது காண்!
அரியணையேறும் ஆசையிலாதவர்
அற்றம் சுமந்திடக்காண்!
அவனியில்தேசம் அமைத்திடக்
கண்டோர் கண்கள் குருடானது காண்!
எரிதழல் நெஞ்சினில் ஏந்தி நடந்தவர்
எழுந்திடவில்லையே காண்!
ஏணிவைத்தெட்டா உயரம்பறந்து
எல்லையும் பிரிந்ததே காண்!
குறிதவறாதோர் கொள்கையில்
நடந்தவர் கல்லறை இடிந்திடக்காண்!
கும்பிட்டு அவர்க்காய் நெய்விளக்கேற்றும்
உரிமையும்போனது காண்!
எரிமலைபோலெழு நெஞ்சங்கள்
எண்ணத்தில் ஏங்கித் துடித்திடக் காண்!
எரித்திட்ட சாம்பலில் எழுந்திடத் துடிக்கின்ற
அக்கினிக்குஞ்சுகள் காண்!
விரிதிசை நிலங்களில் விறைப்பாய் நின்றிட்ட
வேர்கள் அசையுது காண்!
விதைத்திட்ட நிலங்களில் வீரவித்துக்கள்
வேட்கைகள் கொள்ளுது காண்!
தகடக்கத் தகடக்கத் தட்டிமுழங்கிட
வானம் இடிந்தது காண்!
திகு திக்குத் திசையும் தீமை எரிந்திட
எம் தேசம் பிறந்தது காண்!
காந்தள்