தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும்!
(சிறப்பு வரலாற்று நெடுந்தொடர் பாகம் 47)
புலிகளின் புலனாய்வு திறனால் தினறிய இந்திய புலனாய்வு அமைப்பான றோ!
கடந்த பாகத்தில் புலிகளிடம் அடிவாங்கிய இந்திய படைகள் இயலாமையால் யாழ் தொடரூந்து அகதிமுகாமீதான படுகொலையை நிகழ்த்தியிருந்தது பற்றி பாத்திருந்தோம். இந்நிலையில் இன்றைய பதிவில் இந்திய படைகளின் படு தோல்விக்கான காரணங்களில் மிக முக்கியமான காரணம் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
விஷேட பயிற்சிபெற்ற இந்தியாவின் 54வது காலட்படைப் பிரிவு என்ன காரணத்தினால் இலங்கையில் இப்படியானதொரு பின்னடைவைச் சந்திக்கின்றது என்று இந்தியப் படைத்துறைத் தலைமைக்கும், இராணுவ ஆய்வாளர்களுக்கும் அக்கால கட்டத்தில் பெரிய அதிசயமாகவே இருந்தது.
இந்தியப் படையினரின் பின்னடைவுகளுக்கு விடுதலைப் புலிகளின் வீரம், தியாகங்கள், சிறந்த வழி நடத்தல்களே பிரதான காரணம் என்பது உண்மை என்றாலும், இலங்கை தொடர்பான இந்தியப் புலனாய்வு நடவடிக்கைகளில் காணப்பட்ட பலவீனமும் ஒரு காரணம் என்றே இந்திய இலங்கை விவகாரங்களைக் கூர்ந்து கவணித்துவந்த ஆய்வாரள்களும், இந்திய-புலிகள் யுத்தத்தில் பங்குபற்றிய அதிகாரிகளும் பின்நாட்களில் தெரிவித்திருந்தார்கள்.
இந்தியாவின் பிரபல போரியல் ஆய்வாரள் ராஜேஷ் கார்டியன் இந்திய புலனாய்வுப் பலவீனங்கள் பற்றி ஒரு விரிவான பார்வையை ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தியிருந்தார். INDIA’S SRI LANKAN FIASCO என்ற தலைப்பில் ராஜேஷ் கார்டியன் எழுதிய ஆய்வு தொகுதியில், தென் இந்தியப் பாதுகாப்பு விடயத்தில் இந்தியா கவலையீனமாக இருந்தது பற்றியும், இலங்கை விடயத்தில் இந்தியா மூக்கை நுழைத்த காலப்பகுதியில் ஸ்ரீலங்காவில் இந்தியாவின் புலனாய்வுப் பார்வை ஒன்றும் பெரிய அளவில் இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். ஒரு சம்பிரதாய புலனாய்வு நடவடிக்கையை மட்டுமே இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் மேற்கொண்டு வந்தது என்பதுடன், இலங்கையில் இந்தியா இராணுவ நடவடிக்கையில் இறங்கியபோது இலங்கை விவகாரங்கள் தொடர்பான போதியளவு தரவுகள் இந்தியாவிடம் இருக்கவில்லை என்றும் ராஜேஷ் கார்டியன் மேற்கொண்ட அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கையில் இந்தியாவினால் பாரிய வெற்றியை ஈட்ட முடியாமல் போனதற்கு இந்தியாவின் மிகவும் பலவீனமான புலனாய்வு நடவடிக்கைகளே காரணம் என்று, இலங்கையின் களமுனைகளில் இருந்த பல்வேறு படை அதிகாரிகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்திருக்கின்றார்கள்.
இந்திய படையின் ஒரு முன்னணிப் படை உயரதிகாரியான கேணல் ஜோன் டெயிலர் இந்திய இராணுவத்தின் தோல்விகள் பற்றிக் குறிப்பிடும் போது, “எங்களுடைய பெரும்பான்மையான தோல்விகளுக்கு இந்தியத் தரப்பின் மிகவும் பலவீனமான புலனாய்வுத் துறையே காரணமாக இருந்தது. இலங்கையில் மேற்கொள்ளப்ட்ட அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் புலனாய்வுப் பிரிவினரின் ஆலோசனைப்படியே மேற்கொள்ளப்பட்டு வந்ததால், மிகவும் பலவீனமாக இருந்த அந்தப் பிரிவே எமது பின்னடைவிற்கான காரணமாகவும் அமைந்திருந்தது. தமிழீழ பிரதேசங்களைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகள் பற்றிய சரியானதும், துல்லியமானதுமான தகவல்கள் எங்களிடம் இருக்கவில்லை. வடக்குகிழக்கில் இருந்த மற்றைய போராட்ட அமைப்புக்களை விட புலிகள் பலம் மிக்கவர்கள் என்ற தகவல் மாத்திரமே எங்களிடம் இருந்தது. புலிகளின் தந்திரோபாய நடவடிக்கைகள் பற்றியோ, அவர்களிடம் இருந்த வளங்கள் பற்றியோ, அவர்களுக்கு மக்கள் மத்தியில் காணப்பட்ட அமோகமான ஆதரவு பற்றியோ, முக்கியமாக அவர்கள் வசமிருந்த மிகவும் திறமையான புலனாய்வுக் கட்டமைப்பு பற்றியோ எங்களுக்குச் சரியாக எதுவும் தெரிந்திருக்கவில்லை. இதுபோன்ற தகவல்களை இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் எங்களுக்குத் தந்திருக்கவும் இல்லை” என்று அந்த அதிகாரி பின்நாளில் ஒரு இணையத்தளச் செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.
இதேபோன்று இந்தியப் படை நடவடிக்கையில் பங்குபற்றியிருந்த மற்றொரு முதன்மை நிலை அதிகாரி பின்நாட்களில் இவ்வாறு நினைவுகூர்ந்திருந்தார்: “IPKFஐ இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கை முழுக்க முழுக்க இந்திய புலனாய்வு அமைப்பான ‘றோ’ இனது திட்டமிடலிலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது. இலங்கையில் அமைதிப் படையின் நடவடிக்கைகள் எவ்வாறு அமையவேண்டும் என்பது பற்றி இராணுவ உயரதிகாரிகளுடன் ராஜீவ் காந்தி திட்டமிட்டுக்கொண்டிருக்கும்போது, புலிகளின் பலம் பற்றி அவர் கேள்வியெழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த ‘றோ’ உயரதிகாரி ஒருவர், “நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 72 மணித்தியாலங்களுக்குள் பிரபாகரனை நாங்கள் கைப்பற்றிவிடுவோம்” என்று அடித்துக் கூறியிருந்தார், என்று அவர் பின்னாட்களில் நினைவுகூர்ந்திருந்தார்.
இதேபோன்று, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஜே.என்.தீட்ஷித் இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வியில், ‘இந்தியப்படைகள் இலங்கையில் புலிகளை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்று ஆராய்ந்ததாகவும், அப்பொழுது இந்தியப் புலனாய்வு அமைப்புக்கள் புலிகள் 1977ம் ஆண்டு முதல் எங்களால் பயிற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்வர்கள். அவர்கள் பற்றிய விபரங்கள் அனைத்துமே எங்களுக்கு அத்துபடி. அவர்களில் பலர் எங்கள் சொல்லை மீறமாட்டார்கள்’ என்று தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த விடயம் பற்றி ஜே.என்.தீட்ஷித் எழுதி வெளியிட்டிருந்த Assignment Colombo என்ற புத்தகத்திலும் குறிப்பிட்டிருக்கின்றார். அவர் தனது புத்தகத்தில் “ஒருவேளை இந்திய இராணுவம் இலங்கையில் புலிகளுடன் மோதவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் ” என்று இந்திய ராணுவத் தளபதி கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜியிடம் நான் கேள்வி எழுப்பியிருந்தேன். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி முன்நிலையிலேயே நான் இதனைக்; கேட்டிருந்தேன். அதற்குப் பதிலளித்த இராணுவத் தளபதி, “ஒரு இரவிற்குள் நாங்கள் அவர்கள் கதையை முடித்துவிடுவோம்” என்று தெரிவித்தார். இதே கேள்வியை இந்தியப் புலனாய்வு பிரிவின் உயரதிகாரி ஆணந்வர்மாவிடம் ராஜீவ் காந்தி கேட்டபோது, அதற்கு அவர், ‘அவர்கள் எங்களுடைய பையன்கள். அவர்கள் எங்களுடன் உடன்படுவதற்குமாறாக எதுவும் செய்யமாட்டார்கள்’ என்று அந்த அதிகாரி குறிப்பிட்டதாக தீட்ஷித் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று இலங்கையில் படைநடவடிக்கைகளில் ஈடுபட்ட பல்வேறு இந்திய அதிகாரிகளும், தமிழீழத்தில் விடுதலைப் புலிகளை இந்தியப் படையினரால் வெற்றிகொள்ள முடியாமல் போனதற்கு இந்தியப் புலானாய்வுப் பிரிவினரையே குற்றம் சுமத்தியிருந்தார்கள். பல்வேறு விமர்சனங்களுடன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வந்த இந்தியப் புலனாய்வுப் பிரிவினரான றோ, புலிகளை வெற்றி கொள்வதற்கு என்று மற்றொரு நகர்வை எடுக்கத் தீர்மானித்தது. இந்தியாவிற்கு மேலும் மோசமான அவப்பெயரைத் தேடித்தருவதற்குக் காரணமாக இருந்த இந்தத் திர்மானத்தை றோ துனிச்சலுடன் மேற்கொண்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்டு, தமிழ் மக்களால் ஒதுக்கிவைக்கப்ட்ட நிலையில் இந்தியாவில் தங்கியிருந்த மாற்றுக் குழுக்களை தமிழீழ யுத்தத்தில் இந்தியப் படைகளுடன் இணைத்துக் களமிறக்கும் திட்டத்தை இந்திய உளவுப் பிரிவான றோ தீட்டியிருந்தது. ஏற்கனவே இந்தியாவின் ஒரு கூலிப்படையாகவே இருந்து வந்த சில தமிழ் இயக்கங்கள் ஈழயுத்தத்தில் களம் இறக்கப்பட்டன – கூலிக் குழுக்களாக. ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் விட்ட மகா பிழைகளுள் மாற்றுத் தமிழ் குழுக்களை களம் இறக்கியதும் ஒன்று என்றே இந்தியப் படை அதிகாரிகள் பலர் பின்நாட்டகளில் விமர்சித்திருந்தார்கள்.
இந்திய புலனாய்வுப் பிரிவான றோவினால் ஈழமண்ணில் களமிறக்கப்பட்ட ஈபிஆர்எல்எப், டெலோ, ஈஎன்டீஎல்எப் போன்ற தமிழ் குழுக்கள் ஈழத்தில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் பற்றியும் சமூகவிரோத நடவடிக்கைகள் பற்றியும் இந்தத் தொடரில் நாம் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம். அதற்கு முன்பதாக இந்தியப் படையினர் ஈழ மண்ணில் மேற்கொண்ட பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பற்றி அடுத்தவாரம் முதல் நாம் பார்க்க இருக்கின்றோம்.
தொடரும்…
எழுத்து உருவாக்கம்
ஈழம் புகழ் மாறன்
இது ஈழப்பறவைகளின் படைப்பு எனவே இப்பதிவை எடுத்துக்கொள்ளும் பிற இணையத்தவர்கள் எமது இணையத்தின் பெயரையும் இணைத்து கொள்ளவும்.