தேகம் சிலிர்த்திடும் கார்த்திகை மாதம்…
மேகம் கரைந்துருகி
மெல்லெனச் சொரிந்திடும்
வானம் முகமலர்
வளமழை பொழிந்திடும்…
சோகம் தளர்த்தியே
சொந்தங்கள் உணர்த்திடும்
தேகம் சிலிர்த்திடும்
கார்த்திகை மாதம்…
தாகம் தமிழெனச்
சொன்னவர் நினைந்திடும்
வேதம் உரைத்திடும்
வெறுமை நீங்கிடும்
போகும் பொழுதிலும்
புன்னகை பூத்திட்ட
புனிதர் தம் புகழைப்
போற்றிடும் காலம்…
வேகம் கொண்டிடும்
விடுதலை வேட்கையும்
வீறுகொண்டெழு
வெற்றியின் ஈகமும்
நாளும் பொழுதும்
நமக்காய் வாழ்ந்தவர்
நாமங்கள் நாற்றிசையும்
நனிசிறக்குமே…!
-காந்தள்-