“கற்பூரதீபம்”
மூன்று தசாப்தங்கள் ஓடிய வேகம்
தோன்றிய நெருப்பில் பல நூறுமுகம்
சான்றுபகர்கின்ற சரித்திர வேதம் இவர்
போன்று உயிர்க்கொடை யார் காணக்கூடும்…
வெற்றிகள் சூடிடும்
வேளைகள் வரும்
வேங்கைகள் வீறுடன்
வேகம் பெறும்
காங்கேய நெருப்புக்குள்
கரியபுலி உறுமும்
‘கதிரவன்’ கண்களும்
கலங்கி விடை பகரும்
உணவைப் பகிர்ந்து
உரிமை கொண்டாடி
பெரிய நெருப்பிடம்
விடைபெறும் தருணம்
நினைவாய் ஒரு நிழற்படம் – அது
வாழும் நாட்களுள் இவர்
தவமிருந்து பெற்றவரம்….
சட்டைப்பைக்குள் இருக்கும்
ஒரு சரித்திரக்கடிதம் தந்து
கைகளை அசைத்தபடி
போக விடைதரும்…
தோழர்கள் தோழியர் விழிகளில்
நெருப்பாய் வீரம் கசிந்துருகும்…
சட்டென்று நினைவுவர சந்தனத்தேகம்
தாய்மண்ணைக் கட்டிப் புரண்டுருளும்
தொட்டு அணைத்த தாய்மண்ணில்
ஒருபிடி அள்ளிச் சட்டைப்பைக்குள்
போட்டபடி நெடுமூச்செறியும்…
வெற்றிச் செய்தியைத் தந்துவிட்டு
தேகம் பிய்த்து உதறியபடி…
எல்லோர்க்கும்
‘தெரிந்தும் தெரியாமலும்’
போய்வருகின்றோம் என
ஒளிதந்து போனவரே!
கறுப்புச்சட்டைக்குள் பளிச்சென்று
சிரிக்கின்ற உங்கள் முகம்
கந்தகம் சுமந்திட்ட சந்தனத்தேகம்
கண்கள் கசிகின்ற கல்லுக்குள் ஈரம்
கரைகளைக் காணாத
கடலினும் பெரிய ஆழம்…
கனக்கும் மனங்களில் பிறக்கும் வீரம்
காலப்பெருவெளியில் ‘கற்பூரதீபம்’
கடலும் வானும் நிலமும் அறியும் ஈகம்
காதல் புரிந்ததோ கண்போன்ற தேசம்!
காவியமானவர் கருவேங்கை வடிவம்
காற்றிடைவெளியிலும் கரும்புலி வாழும்!
-காந்தள்-