கறள் ஏறிய கம்பிகள்
ஆண்டவர் வம்சம் எல்லாம்
அடிமைகள் ஆகியது
ஆள்வது எப்போ என்று
மொட்டுக்கள் கருகியது
தீயினைச் சுமந்த தேகம்
தீர்வினைத் தேடியது
பிரிவினை வாதம் எங்கள்
பிள்ளைகள் தேடியது
முடிவுகள் விடிவு இன்றி
மூச்சுக்கள் முட்டியது
தெரிவுகள் இன்றி
எங்கள் தேகமே எரிகிறது
காவியம் எழுத எண்ணிக்
காரிருள் நடந்து சென்றோம்
கந்தகம் சுமந்ததென்று
கனவினைத் தொலைத்து விட்டோம்
கைகளின் விலங்கு மண்ணில்
கழன்றிடும் நாளும் எப்போ
கவலையே நிறைத்த கண்ணின்
ஓரமும் காய்வது எப்போ…….
தம்பிக்கு முன்னால் தமையன்
கம்பிக்கு பின்னால் கணவன்
தீர்வுகள் தருவது என்றால்
திறந்து கொள் கம்பிகளை
கவலைகள் போக்கி மண்ணில்
கணமெல்லாம் வாழ வேண்டும்
நினைவுகள் சுமந்த வாழ்வில்
நிதமுமே சாக வேண்டும்
வழி விடு நாங்கள் போக…..
….கவிப்புயல் சரண்…….