“கார்த்திகைக்காலம்…”
செக்கச்சிவந்தபடி
செவ்வரத்தை பூத்திருக்கு…
காற்றுக்கசைந்தபடி
கனகாம்பரம் கால்கடுக்கக் காத்திருக்கு…
புத்தம்புதுப் பொலிவோடு
நித்தியகல்யாணி
நிலமெலாம் நிறைஞ்சிருக்கு…
வேலியோரம் பூத்திருந்த கார்த்திகைப்பூ
வீரமாய் நிமர்ந்திருக்கு…
கார்த்திகை நாளென்று கல்லறைக்குத்
தமைச்சூடக் காத்திருக்கும்
காரணத்தால்,
பூத்திருக்கும் பூவையெல்லாம்
முகர்ந்தும் விடக்கூடாதென
தேனீக்கள் கூடி தீர்மானம் போட்டிருக்கு…
ஆலயமணிகளெல்லாம்
ஆறு ஐந்திற்கொலிப்பதற்காய்
ஆடாமல் தவமிருக்கு…
தேசியப்பிரகடனம் செய்வதாய்
ஒத்திகை பார்ப்பதென்று
செண்பகப்பறவையெல்லாம்
ஏதேதோ பேசிக்கொண்டிருக்கு…
சிவப்புமஞ்சள் கொடிகொண்டு
வனப்போடு தமிழீழம்
புதுக்கோலம் பூண்டிருக்கு…
இது கார்த்திகைக்காலம்..
காத்தவர் தம்மை நினைந்துருகிக்
கைதொழும் காலம்…
புல்லுக்கும் புதுநிமிர்வு தருங்காலம்..
புனிதர்களைப் போற்றிப்
புது எழுச்சி பெறும்காலம்…
-காந்தள்-