“இது கவிதை அல்ல காவியம்”
ஓடித்திரிந்து ஒன்றாய்க்குலாவி
கூடித்திரிந்திருந்தோம்
நண்பர்களாய்…
பாடித்திரிந்த பறவைகள் நம்வாழ்வில்
கூடிழந்து போனோம் ஒருநாள்…
காலம் தந்தது யுத்தம்
காவிச்சென்றது முற்றம்
யாவிலும் நீயும், நானும்
இணைந்தும் பிரிந்தும்
ஒன்றாயிருந்தோம் நண்பனே!
எரிந்துகொண்டிருந்தது ஈழம்..
சரிந்துபோனது இனவாழ்வு…
புரிந்து கொண்டு எம்முன்னே
விரைந்து போன ஈகங்களை எண்ணிக்
கரைந்து போயிருந்தோம் நீயும் நானும்
தெளிந்த நாமும் பணியேற்று
நிறைந்த தேசம்காணவென்று,
மறைந்து போனோம் ஓருநாள் மாலை..
மறைவிடம் சேர்ந்த நாம் பணியின்
மகத்துவம் கருதி
பிரிந்துபோய்விட்டோம்…
காணத்துடித்தது நட்பு..
காலம் தந்தது பெரும்பொறுப்பு..
கரைந்துபோனது காலம் – பலதும்
கடந்து போனது தேசம்…
அந்த அதிசயம் ஓருநாள் நிகழ்ந்தது….,
பெருஞ்சமர் போகையில் நடந்த
குறுஞ்சந்திப்பு…
சற்றும் எதிர்பாரா உன்னை
உற்றுப்பார்க்கிறேன்…
ஒற்றைக்காலை ஈகம் செய்துவிட்டும்
சற்றும் தளரா உறுதியோடு…
கறுப்புச்சட்டைக்குள் இருந்தபடி
சிரத்துக்கொண்டிருந்தாயடா…!
கண்கள்பனிக்க,
கட்டியணைத்துக்கொண்டேன்…
அப்போதும் நீ அர்த்தமாய் புன்னகைத்தாய்…
நிறைய பேசநினைத்தும் முடியாமல்
பாசத்தழுவலொடு விடைபெறும்
”தேசப்புயலாக”நீ நின்றாய்….
காணத்துடித்த நட்பை – இனிமேல்
காணமாட்டேனா? என்று
கலங்கிப்போய்விட்டேன்… நீயோ
கடமையேற்று துணிவோடு
காவியமாகிவிட்டாய்….
நானோ உனக்காக
கண்கள் குளமாக,- என்
கடமை நினைவிருத்தி,
கவிதை எழுதுகிறேன்…
-காந்தள்-
24/11/2016