தலைப்பிடாத தலையெழுத்து....!
உக்கிரமானதோர்
பேச்சு வார்த்தை
நடந்த படியே இருக்கிறது
நாங்கள் அமைதியைப்
பேணிக்கொண்டிருந்தோம்
ஆனாலும் ஆணவத்தின்
அரசாங்கம் எங்கள்
அமைதிப் போக்குகளை
உடைத்தெறிந்து
உருக்குலைப்பதைப் பற்றியே
சிந்திதிக்கலானார்கள்
எங்கள் கண்ணீர் துளிக்குள்
அவர்கள் களிப்புற்றார்கள்
எங்களின் வலிக்குள்
அவர்கள் வசந்தப்பட்டார்கள்
நாங்கள் இன்றல்ல
என்றும் எதிர்பார்ப்பது
நிரந்தரமான நிம்மதிகளைத்தான்
மதநல்லிணக்கத்தை
முன்பை விட இன்று
அதிகமாய் நேசிக்கிறோம்
இதோ வந்திடுவன்
என்று போன அப்பா
இன்னும் வீடு வரவில்லை
அவரின் வருகைக்காய்
காணி வேலிகளை
களவாட அனுமதித்தோம்
அக்காவையும் அண்ணாவையும்
கடைசி நேரத்தில்
பிடித்துக் கொண்டு போனார்கள்
இன்றுவரை அம்மாவின்
தேடல்கள் தொடர்கிறது
பாவம் அம்மா கொஞ்சம் கொஞ்சமாய்
இறந்து கொண்டிருக்கிறாள்
என் கல்வி எதிர்கால கனவு
இவைகளையெல்லாம்
துளியேனும் நினைப்பதில்லை
நிம்மதி இல்லாத போது
இவைகள் இருந்து என்ன பயன்
பேச்சு வார்த்தை
நடந்து கொண்டுதான் இருக்கிறது
நான் எதிர் பார்க்கிறேன்
அம்மாவின் மரணத்திற்கு முன்னாவாது
பேச்சு வார்த்தை முடியுமா என்று.
வன்னியூர் கிறுக்கன்
Share this: