உங்கள் வீரம் நினைத்து விடுதலை உணர்வால் மேனி சிலிர்க்கும்…!
இரவின் முழுநீளம் விலக்கியும் இரவியின் ஆட்சியின்றிப் பரவிக்கிடக்கும் நீலவானின் எல்லையில்லா முடிவுகளைத் தொடர்ந்தும் தேடிச்செல்கின்ற மேகத்திரள்களால் நிறைந்திருந்த கார்த்திகைக்காலம்…
துறவிபோல் தவம்புரிந்து தூயவரம் பெற்றதனால் பனியிலே சிலிர்த்தபடி பூக்களெல்லாம் புன்னகைத்து புண்ணிய நிலம்போகக் காத்துக்கிடக்கின்றன…
குருவியொன்றின் உச்சாடனத்தில் குளிர்விடுவித்துக்கொண்டபடி மனக்கதவுகளை அகலத்திறந்துவைத்து ஆழ்ந்த சிந்தனைச் சிதறல்களைப் பெருமூச்சில் சுமந்தபடி, கவியெழுதத் துளிர்விட்ட பேனாவும் பெருமிதம் கொண்டது…
அருவிபோல் மடைதிறந்து வார்த்தைகளால் முண்டியடிக்கும் கவிதைப்பூவைக் காணிக்கையாக்கிட அறம் நின்ற காவல்தெய்வங்களின் கமலத்தாள் பணிகின்றது நெஞ்சம்….
வாழைமரம், தோரணம், வரிப்புலியில் சீருடை, வரிசையாய் வீரர் நடை, வீதிநெடுக இருமருங்கும் விழிநீர் சொரிந்தபடி எம்மக்கள்…, விண்ணையும் கசிந்துருகச்செய்யும் விடுதலை கானங்கள்… , ஆழநேசித்த வீரத்தலைவனையும், மண்ணையும் நெஞ்சில் சுமந்தபடி இந்தச்சந்தனப் பேழைகள் எங்கே ஏகின?
நீங்கள் வீழ்ந்த இடத்தில் படர்ந்த குருதியில் வேர்முளைத்தது அதனால் விடுதலை விருட்சம் இன்னும் வீறுகொண்டெழுந்து விழுதெறிந்தது…
தோள்களில் சுமந்த தோழர்கள், தோழியர் நீங்கள் காத்துக்கிடக்கும் கல்லறைக் கோயில்களைக் காணத் தவம்கிடந்து கோடிபுண்ணியம் செய்தன எம் கண்கள்…தேடிவந்து உங்களிடம் வரம்பெறும் நாளுக்காய்த் தினம் தினம் தவித்தது மனது… நினைவுக்கற்களும், நீண்டவரிசையில் கல்லறைக் கோயில்களுமாய்க் கொண்ட தரிசனங்களால் வரம் தரும் வல்லவர் நினைவுகள்…
எந்த நொடியும் மழைவரலாம் போல் மடைதிறக்கக் காத்திருக்கும் கண்ணீரை இமைஇடுக்குகளில் தாங்கியபடி, அவரவரை நினைந்து அவரவரவர்க்காய்ச் செய்தெடுத்த பட்சணங்களையும், பாசத்தையும் கையோடு எடுத்தபடி, தூயவர் நின் உருப்பளிங்கு மேனிகள் தாங்கி நில்துயிலும் நிலம்நோக்கி விரைந்தன உறவுகள் கால்கள்…
ஆங்கே!
பட்டொளிவீசிப் பறந்த கொடிகளில் உங்கள் புன்னகை தெரியும்… பாசமாய் உறவுகள் கூவியழைக்கையில் கல்லறை அசையும்… நெய்விளக்கேற்றி நெஞ்சமுருகையில் விட்டென மழைபோல் விழிநீர் சொரியும்… உங்கள் வீரம் நினைத்து விடுதலை உணர்வால் மேனி சிலிர்க்கும், கல்லறைப்பாடல் காதை நிறைக்கும் காவல்தெய்வங்களைப் போற்றிப் புகழும்…
உங்கள் கல்லறைமேனிகளைக் கண்களில் ஒற்றிக்கொண்ட நாம் ஒற்றை மலர்ச்செண்டைக் காணிக்கையாய் அணிவித்துவிட்டு ஒருபெரும் தேசத்தையல்லவா யாசிக்கிறோம்…
-காந்தள்-