வா பகைக் குலம் வென்று வாழ்வோம்
சுடுகின்ற யாவும் இங்கு தீயும் அல்ல
சுழல்கின்ற எல்லாமே காற்றும் அல்ல
விரிகின்ற கோபத்தை நீ மாற்றிடு
விடிவுனை தீண்டிட முன்னேறிடு
அலை வந்து அடித்தாலும் வலி தோன்றுமா
நுரை தன்னின் வேகத்தில் நிறம் போகுமா
சுடுகின்ற சூரியன் தன் குணம் மாறுமா
உன் கோபத்தின் வீரியம் வெறியாகுமா
பகை சூழ வாழ்கின்ற பாம்பாகிடு
படை கோடி வந்தாலும் பகையாகிடு
வலியோரை நீ தீண்டி பழி வாங்கிடு
பட்ட வலி கோடி மறவாது உறவாடிடு
விடிவுனை நெருங்கிடும் குனியாதிரு
விடிவிலே உருகிடும் மெழுகாய் இரு
முடிவது முடிந்தது முடிவே இல்லை
வருவது வளர்வது விடிவின் எல்லை
இருமியே சாவதில் சிறப்பும் இல்லை
இரு விழி நனைப்பதில் பெருமை இல்லை
சா வரும் ஒருமுறை பயத்தை விடு
சுயத்தை நீ இழக்கு முன் கரத்தை கொடு
எழுவது என்பதில் பெருமை இல்லை
விழும் நொடி எழுவதே இறுதி எல்லை
அடிமேல் அடி விழும் அணையாதிரு
ஆதிக்க வெறித்தனம் அழித்தே எழு
இயற்கையும் காதலும் வேறே இல்லை
இணைவதை தடுப்பதில் ஏது எல்லை
முட்டிய விழிகளை துடைத்து விட்டு
முன்னேறி நீ சென்று முடிவாகிடு….
….கோலத்தை வெல்லும் காலம் என்றும்
ஞாலத்தை ஆளும் முடிவின் எல்லை.
……கவிப்புயல் சரண்…..