குழிகளின் உள்ளே எங்களின் அழுகை யாருக்கும் கேட்பது இல்லை…!
வீரத்தின் வேரினில் வெடித்த நம் நெருப்பு
வெற்றியை நிச்சயம் சேர்க்கும் -அது
ஆழத்தில் புதைந்துமே அழுகுரல் கேட்டிடும்
ஆன்மத்து நெஞ்சிலே வேர்க்கும்
தேசத்தை காத்துமே நின்றவன் மேனி
தீ மழை அழித்ததுமில்லை -எம்
பாசத்தை எண்ணிச் சாவினை தாங்கிய
சந்தனப் பேழைகள் முல்லை
அன்னையும் உண்டு தந்தையும் உண்டு
தாயகம் பெரிதென்று வாழ்ந்தோம்
சொந்தங்கள் ஆழ சுதந்திரம் சேர
சோற்றுடன் நஞ்சுண்டு வீழ்ந்தோம்
குழிகளின் உள்ளே எங்களின் அழுகை
யாருக்கும் தெரிவது இல்லை -எம்
வலிகளை மெல்லும் வாசலை திறக்க
ஊருக்கு புரிவதும் இல்லை
உங்களுக்கென்றே உயிரினை திறந்தோம்
உணர்வுகள் யாவும் சரித்தோம்
பூக்களை கொல்லும் புயலினை வெல்லப்
படை நிலைகாடுகள் எரித்தோம்
எம்முடல் வாசம் காற்றிலே உண்டு
கந்தகம் இன்றும் கனக்கும் -அந்த
காங்கை நெருப்பிலே கார்த்திகை பூக்கள்
காலத்தில் என்றுமே மணக்கும்
கல்லறை வாரும் கனவுகள் சேரும்
கண்களில் மழையெனப் பொழியும் -எம்
மண்ணதை நனையும் மாவீரம் ஆர்க்கும்
மனங்களில் விதையினை விதையும்
….கவிப்புயல் சரண்…..