பூஜை செய் பூமித்தாய்க்கு….!
நித்தம் எழுந்து நெல் முத்தம் அணைத்திட
பூஜை செய் பூமித் தாய்க்கு
சித்தம் உயிர் பெற யுத்த நினைவினை
பாதை செய் ஈழத்தாய்க்கு
ஆண்ட மண்ணிலே அடிமைகள் ஆகியும்
ஆனந்தம் சில பேருக்கு
மாண்ட பொழுதிலே மயங்கிய வேளையும்
மகிழ்ச்சியும் பல பேருக்கு
சாதனைத் தேசம் வேதனை தன்னை
சுமக்காது நீண்ட வேளை
போதனை தன்னில் புத்தமே என்றால்
அஞ்சாது நீட்டும் வாளை
ஆரியம் வந்து அழிப்பது மண்ணில்
ஆயிரம் கால உண்மை
அடிமைகள் என்னும் சொல்லினை
மாற்றி தட்டுவோம் வீரத்தோளை
வெற்றிகள் சூடும் வேகமும் கொள்ளும்
அடிமையாய் இருக்கும் பூமி
அடங்கிட மறுக்கும் ஆயிரம் இனத்தில்
என்தமிழ் முதன்மைச் சாமி
நெஞ்சிலே எரியும் வஞ்சத்தீ அணையும்
காலத்தை வழி சமைப்போம்
பிஞ்சிலே வீரம் போர்க்கலை தன்னை
பிள்ளைக்கும் புரிய வைப்போம்
வீரத்தை மறந்து கோலத்தை இழந்த
பூமிக்கு பூஜை செய்வோம்
அவள் ஆழத்தை உழுது எம் ஈழத்து
கருவை மெல்லவாய் விதை விதைப்போம்
…..கவிப்புயல் சரண்……….