தெய்வங்கள் இறப்பதில்லை !!!
இடி ஓசை ஒன்றுதான் கேட்கும்
அது, அடிமனசை ஆட்கொள்ளும்
பகைவனின் பாசறை வீழ்ந்ததென்று
முரசங்கள் வெற்றி கொட்டி
கரும்புலிகள் சூடிய வாகை தரும்
செல்லும்வரை,
இவர்களின் முகம் அறியோம்
வெல்லும்வரை,
பெற்ற தாயும் அறியாள்
தடை உடைத்தவன்(ள்)
தன் பிள்ளை என்று
விடிவின் தேடலில் வெற்றிகள் குவித்து
தாய்மண் நெற்றியில்
வெற்றித் திலகம் வைத்தவர் இவர்கள்
சாவு மாவீரரின் செருக்களம்
வாழ்வே இவர்களின் போர்க்களம்
வாழ்ந்து வெல்லவே அழைக்கின்றார்
வா வா என்றே
கோயில்கள் இடிக்கப் படுவதுண்டு
தெய்வங்கள் இறப்பதில்லை
எங்கள் இதயக் கோயிலில் வாழும்
உதய தீபங்களே
முடியாது விடியாது என்ற
வினையினை துறந்திட்டோம்
உமை எந்நாளும் நினைவோமே
ஒரு நாளும் மறவோமே
பாவலர் வல்வை சுயேன்