கார்த்திகை மாதம்
கார்த்திகை மாதம் கண் கண்ட தெய்வங்களை நெஞ்சினில் நிறைத்து கண்களால் உருகி. - அவர் காலடி பணிந்து மீண்டும் அவர் பாதடி தொடர பணிக்கும் இந்த கார்த்திகை மாதம்
விடுதலை வேள்வியில்
உயிர் விடுதலை செய்தவர்
உன்னதம் உணர்த்தும்
இந்த கார்த்திகை மாதம்
தமிழ் மாட்சிமை பெருக்க
நம் நாட்டினை மீட்க
சாவினை அழைத்து
தம் வாழ்வினைக் கொடுத்து
நித்தியமானவரை
நம் சிந்தையில் ஏற்றி போற்றிடும்
இந்த கார்த்திகை மாதம்
விடுதலை நாடி
வெஞ்சமர் ஆடி
வேங்கைகள் ஆகி
செருக்களம் புகுந்து
சிங்களச் சேனையின்
சங்கினைப்பிடித்து
சாவினைக் கொடுத்த
எங்கள் மறவர் படைகளை
மனங்களில் இருத்தி
எம் மனைகளில்
விளக்குகள் ஏற்றி
ஒளி பரப்பிடும்
இந்த கார்த்திகை மாதம்
எப்படை எனினும்
பெருந்துயர் வரினும்
எந்தன் மண்ணும்
எந்தன் தமிழும்
பகைவர் பாதம்
பணியாதென்று
வீர நெறி நின்ற கரிகாலன்
தம்பி தங்கைகளை கண்ணீர் மல்கி கண்களில் வைத்து காவியம் பாடும்
இந்த கார்த்திகை மாதம்
இன்றோ நாளையோ
என்றோ ஒரு நாள் விடியும்
எங்கள் தேசம்
அன்றும் என்றும் எம் தேசத்தின்
காற்றினில் வீசும் உங்கள்
உயிர்களின் வாசம்
அல்வையூர் தாசன்
13.11.2018