செத்தவர் கண்ணில் ஊறிய கண்ணீரில்
எத்தனை வலிகள்..
காய்ந்து போன கண்களில்
இருந்து
ஊறிவந்த கண்ணீரைக்
கண்டவன் நான்
இறந்து போனது உயிர்கள்
மட்டுமல்ல….ஒரு
இனத்தின் அடையாளமும்தான்…….
மரண ஓலத்தின்
இரைச்சல் களின் ஊடே
மனித இரத்தத்தில் குளித்து
மறு பிறப்பெடுத்து வந்த…எனது
இனத்தின் எஞ்சிய உயிர்களில்
நானும் ஒருவன்
நியாயத் தராசுகளைச்
சுயநலமாக்கி
மயான அமைதியில் மரணித்துப்
போய்க் கிடக்கிறது
உலக மனித நேயம்……
எனது ஊனக்கண்ணில்
இருந்து வரும்
ஒற்றைத்துளி கண்ணீரில்
ஓராயிரம் வலிகள் புதைந்து
கிடக்கிறது
கண்ணீர்த் துளிகளுக்குக்
காரணம்
தேடிக் கொண்டிருக்கின்றேன்
பார்வை மங்கிப் போவதைப்
பற்றிக்
கவலைப்படாமல்……..
சாவைப் பரிசாகத் தந்தவனின்
சாவைப் பார்க்கவேண்டும்
என்பதற்காக….இன்னும்
வாழ்வைத்
தக்கவைத்துக் கொண்டிருக்கிறேன்
வலிகளைச் சுமந்து வாழுகின்ற
எனது இனத்தின்
விழிகளில் வழியும் கண்ணீருக்கு
விடைதேடி…..
பாவப்பட்ட இனத்தில்
பிறந்ததனாலோ என்னவோ
பல நேரங்களில்
கோபப்பட வேண்டியிருக்கிறது
ஏகப்பட்ட தனிமை எனக்கு
கிடைக்கும் போதெல்லாம்
பாடல் இல்லாத திரைப்படம்போல
பக்குவம் பெறுகின்றேன்…….
ஊர் மேய்ந்து போன
வான் நிலவின்
ஒளிக்கீற்றாய்த் தெரிகிறது… நான்
நேசிக்கும் தேசமும்
நம்பமுடியாத நம்பிக்கையும்
கார்காலக் குளிர்கூட
கதகதப்பாய் இருக்கிறது..என்
உடம்பில் சூடு இன்னும்
அதிகமாய் இருப்பதனால்……
இலட்சோபலட்சம்
கண்களில் இருந்து பெருக்கெடுத்த
கண்ணீரைப் பார்த்தவன்
நான்
அத்தனை வலிகளின்
அவலத்தின் வெளிப்பாடே
இன்னும் என் கண்ணில்
வழிகின்ற
இரட்டைத் துளி கண்ணீர்……
இருள் மூடிய நிலவு
ஒருநாள்
மூன்றாம் பிறையாகி முகிழ்ப்பது
போல்…என்
கனத்த இதயத்தில் இருந்து
அனுப்பப்படுகின்ற …அந்த
தொலைந்து போன செய்தியாய்
வெளிவரும்
காய்ந்து போன கண்ணீர்த் துளியே
இன்னும் என்னை
உசுப்பேற்றிக் கொண்டிருக்கிறது
முன்றாம் பிறை ஒருநாள்
முழு நிலவாய் வரும் என்ற
நம்பிக்கையில்……
ஆவூர்க்குமரன்
தமிழீழம்