ஓங்குவார் கரம் முன் என் சிரம்
குனியாது தாங்கிடு பைந் தமிழே
உன் மொழி பிறந்ததில் உவகை
ஆயிரம் உயிரது என் தமிழே
ஓங்குவார் கரம் முன் என் சிரம்
குனியாது தாங்கிடு பைந் தமிழே
மங்கிடா புகழ் மேவி மேதினி
ஓங்கிடு தண் மதியே
வந்திடும் பகை நொடி வாசலை
தாண்டு முன் வென்றிடு வண் முகிலே
கோடி சூழ் துன்பம் கொடியேன
வரினும் வீசிடு உன் புகழே
தேடிய மொழிகளுள் நாவினில்
இனிக்கும் முதுமலைத்தேன் மொழியே
திசை யாவிலும் உன் கொடி
வானில் பறந்திடும் வண்மொழியே
ஆளும் மொழியொன்று அவனியில்
தோன்றிடில் ஆள்வது நம் மொழியே
வாழும் மொழியென்று வான் புகழ்
தாங்கிடில் வளர்வது நம் மொழியே
வீழ்ச்சி காண வரலாறு தாங்கிய
வரமோடு தவ மொழியே
வாழிய வாழிய வாழிய என்றும்
எங்கள் தமிழ் மொழியே…….
………..கவிப்புயல் சரண்……..