இது மே மாதம் விழிகள்…!
சிவக்கின்றன வீணரே- உம்மை
நினைத்து இதயம் நோகிறது
அழித்தவரே ஆட்சியில் அமர்ந்து
ஆட்டம் காட்டுகிறீர்-ஓட்டம்
எடுக்கும் காலம் மீண்டும் வரும்
சிறைகளில் இன்னும் சிதைந்து
கொண்டிருக்கும் உறவுகளை
இனியாவது விடுதலை செய்
காணாமல் ஆக்கப்பட்டவரை
கண்டோம் என்றே அவர் பெற்றோர்
சொல்லிட வழி செய்…
எமக்கான நீதி கிடைக்கும் வரை
நீறு பூத்த நெருப்பாக நாம்
நம் தலைமுறை தொடருமே
நீதிக்கான பயணத்தை
தப்பிவிட்டோம் என்பவரெல்லாம்
தலை தெறிக்க ஓடும் காலம்
வெகு தொலைவில் இல்லை…
தர்மத்தின் வாழ்வைக் கௌவிய
சூது விலகும் மீண்டும்
தர்மம் தழைக்கும் இது தமிழர்
தலை விதியை மாற்றும்
கொடுங்கோலனே எழுதி வை
உன் நாளேட்டில் இனி விடியும்
காலம் எல்லாம் ஈழத் தமிழனுக்கு
விடியல் தரும் காலம் என்றே…
கிருபா அனித்தா