வீரம் விதை கொண்ட மண்
கள்ளத் தோணியர் நாம்
சொல்லித் திரிந்த பகை
கொல்லத் துடித்ததெம் மண் -அது
வீழாப் புகழ் கொண்ட மண்
வெல்லத் திறம் கொண்டு
வேங்கை வழி சென்று
அள்ளிப் பகை தின்ற மண் -இது
அடங்காப் புகழ் கொண்ட மண்
தாயும் தந்தையரும்
தமிழின் பிறகு என்று
தானை நடத்திய மண் -இது
சேனைத் தமிழவன் மண்
வேகம் கொண்டு நிற்க
வேங்கை வழியதுவே சாலச்
சிறந்ததென்று ஆழப் பிறந்ததெம் மண் -இது
வாழத் துடித்தவர் மண்.
பகை காலில் பணியோம் என்ற
பாசறை வீரம் கண்டு
சாகத் துணிந்ததெம் மண் -உலகில்
ஆகச் சிறந்ததெம் மண்
கொள்கை எனும் நெருப்பில்
கோலப் புடங்கள் இட்டு
உயிர் அள்ளித்தெறித்ததெம் மண் -கடல்
உப்புக் கரித்ததெம் மண்
வல்ல தலை இருந்தும்
நல்ல படை நடந்தும்
துரோகத் தீயில் விழுந்ததெம் மண் -பகை
இன்றும் பயந்திடும் மண்
அந்தப் பொழுது கண்ணில்
வீழ்ந்த உடல் நினைந்து
வெல்லத் துடிக்கிறது- மண்
உடல் வெம்பி வெடிக்கிறது ……
.கவிப்புயல் சரண்.