பூவும் புலியாகி போரில் குதித்திட்ட நாடு
முன்னொரு காலத்தில்
முடி சூடா மன்னர்கள் நாங்கள்
ஆற்றல் நிறைந்தோனின் ஆளுமைக்கு அரணாய் நின்றோர்கள்
ஏற்றம் மட்டுமே எதிர்கொண்டு
ஈழப் போர்த் தேர் ஓட்டி நின்ற சாரதிகள்
கூற்றம் என வந்தோன் குடலை உருவி அவன் கொற்றம் தனில் நடந்தோர்
சீற்றம் மிக கொண்டு செந்தமிழ் ஈழத் திசை எங்கும் ஏற்றம் பெற்றிருந்தோர்
காந்தள் நில மன்னன் கரிகாலன் கண் அசைவின் கந்தகத் துகளானோர்
பைந்தமிழ் இனம் வாழ எம்மை பரிசளிக்கும் பக்குவம் அடைந்து நின்றோர்
படை கோடி வலம் வரினும் தடை கோடி எதிர் எனினும் தகர்க்கும் முடிவுடையோர்
யாருக்கும் அஞ்சாத யாசகம் இல்லாத தனித் தேச நாட்டிற்கு தளம் அமைத்து நின்றோர்கள்
அடிமைத் தளை கொண்ட ஓரினத்தின் விலங்குடைத்து கால் நடக்க விட்டவர்கள்
நீலக் கடல் ஏறி வந்த சிங்களப்பேய் நடுவே சீறிப் புலி கொடி பிடித்தோர்
மேகம் தனை உரசி வானில் படை நடத்தி வலிமை யாது என வரைமுறை காட்டி நின்றோர்
கந்தகம் தனை சுமந்து கரிகாலன் ஆணை எனில் திருவுடல் தான் வெடிக்கும் திறமை வளர்த்து நின்றோர்
மக்களை காத்து நிற்க உடலால் அரண் அமைத்து உரமாய் இறுதி வரை வீரப் போர் புரிந்தோர்
ஆனால் இன்று…….
நாயும் நரிகளும் நடை பயிலும் மண்ணின் உயிர்ப்பிணங்கள் நாங்கள்
வேர் அறுந்து வீழ்ந்த ஆலமரத்தை தாங்கிபிடித்திருக்கும் விழுதுகள் நாங்கள்
அறப்போர் தனில் எங்கள்
காண்டீபம் கை இழந்த அர்ஜூனர்கள்
வறுமை தான் விளங்கும் வலி மிகுந்த வாழ்வினர்கள்
ஆனால் சக்கரம் ஒரு போதும் சரிந்தே இருக்காது
எக்கரம் விழ்ந்திடினும் எம் கரம் உயர்ந்து கொள்ளும் மக்கள் துயர் துடைக்க ..
…..கவிப்புயல் சரண்…