முல்லைச் சமர்
2900 மீற்றர் நீளமும், 1500 மீற்றர் அகலமும், 8500 மீற்றர் சுற்றளவும் உடையதும் முல்லை மாவட்டத்தின் பிரதான செயற்பாட்டு மற்றும் நிர்வாக மையமுமான முல்லைத்தீவு நகரையும், அதனோடு சேர்ந்த பெரும் கடற்பரப்பையும் ஆக்கிரமித்திருந்ததும் சிறிய ஒரு இராணுவ முகாமாக அமைக்கப்பட்டு, பத்தாண்டு காலத்தில் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, குடியிருந்த மக்களை விரட்டியடித்துவிட்டு சுற்றியிருந்த கிராமங்களையும் உள்ளெடுத்த பெரும் படைத்தளமாக மாற்றமடைந்திருந்ததுமான முல்லைத்தீவு சிங்களப் படைத்தளம், கடந்த 1996 ஆடி 18ஆம் நாள் அதிகாலை ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல் நடவடிக்கையின் மூலம் முழுமையாகவும், நிரந்தரமாகவும் கைப்பற்றப்பட்டதுடன், முல்லைத்தீவு நகரமும் விடுவிக்கப்பட்டது.
‘ரிவிரச’ க்களுக்குப் பின்பு புலிகள் ஓயவைக்கப்பட்டுவிட்டனர் என உண்மையிலேயே உலகம் நம்பியிருந்த வேளையில் நிகழ்த்தப்படுகின்ற தாக்குதல் என்பதால் சமர்க்கள நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, முழுமையான போர்த்திட்டத்தையும் நேரடியாகவே நெறிப்படுத்தி வெற்றிகரமாகப் பூர்த்திசெய்த தலைவர் பிரபாகரன் அவர்கள், நடவடிக்கைக்கு ‘ஓயாத அலைகள்’ என்று பெயர் சூட்டினார்.
தாக்குதல் ஆரம்பித்த ஒரு மணி நேரத்திற்குள் முதலில் வெற்றிலைக்கேணியிலிருந்தும், பின்பு திருமலையிலிருந்தும் சிங்களக் கடற்படை களத்துக்கு விரைந்தது. தளத்திலிருந்த படையினருக்கு உதவி வழங்குவதுடன், இறங்கியிருந்த புலிகளின் படையணிகளைக் கடல்வழியாகத் தாக்கவும் முயற்சித்தபோது, அது கடற்புலிகளின் கடும் எதிர்ப்பைச் சந்திக்கவேண்டியிருந்தது.
18ஆம் திகதி காலை 8.30 மணியளவில் 8மணி நேரக் கடுஞ்சண்டைகளின் பின்
வெளிப்புறக் காப்பு வியூகத்தை உடைத்தெறிந்து, கடல்வழியாகவும் தரைவழியாகவும் பல முனைகளினூடு நுழைந்த புலிகளின் போரணிகள், உப முகாம்களனைத்தையும் வீழ்த்தி – பிரதான முகாம் பகுதியைத் தாக்கி தளத்தின் கட்டளைப் பணிமனை, ‘ஆட்டிலறி’ மற்றும் மோட்டர் ஏவுதளம், தொலைத்தொடர்பு நிலையம், போர்த் தளபாடக்களஞ்சியம் முதலியவற்றைக் கைப்பற்றி, எஞ்சிய துருப்புக்களை – பிரதான முகாமின் ஒரு பகுதியான விஜயபாகு ரெஜிமெண்டின் 6 ஆவது படையணிச் செயற்பாட்டுத் தலைமையகப் பகுதிக்குள் முடக்கி வளைத்துக்கொண்டதுடன், தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சேதப்பட்டும் களைப்படைந்துமிருந்த தாக்குதலணிகளை மீள ஒழுங்கமைத்து, இரவானதும் முகாமின் எஞ்சிய பகுதியைத் தாக்கிக் கைப்பற்றுவதற்கான தயாரிப்புக்களில் தளபதிகள் பாடுபட்டுக்கொண்டிருந்த வேளை மாலை, 2.30 மணியளவில், முகாமிற்குத் தென்புறமாக 3 கிலோ மீற்றர் தூரத்தில் மீட்புப் படையினரைத் தரையிறக்கி – இன்னொரு சண்டை முனையைத் திறந்தான் எதிரி; மீட்பு நடவடிக்கைக்கு ‘திரிவிட பகர’ எனப்பெயரும் சூட்டினான்.
தளத் தாக்குதல் பூர்த்தியடையாத நிலையிலும், இன்னொரு முனையில் எதிரியை எதிர்கொள்ளவேண்டி ஏற்பட்ட நிலையிலும், சிக்கலடைந்த இந்தக் களநிலைமையிலும் துரிதமாகத் திட்டமிட்ட தலைவர் அவர்கள், தரையிறங்கியவர்களை முற்றுகையிட்டு – இறுக்கமான சுற்றிவளைப்புக்குள் வைத்துக்கொண்டு, முதலில், உடனடியாகத் தளத் தாக்குதலைப் பூர்த்திசெய்ய முடிவெடுத்தார்; அதனை முடித்துக்கொண்ட பின்பு, ஆறுதலாகவும் முழுமையாகவும், தரையிறங்கியவர்களைக் கவனிக்க முடியும் எனத் தீர்மானித்தார்.
அவரது திட்டத்தினைத் தளபதிகள் விரைவுடன் செயற்படுத்தியபோது, அன்றிரவு முல்லைத்தீவுப் படைத்தளம் புலிகளின் படையணிகளிடம் முழுமையாக வீழ்ச்சிகண்டது; அதே சமநேரத்தில்இ தரையிறக்கப்பட்ட படை மரணப்பொறிக்குள் சிக்கிக்கொண்டது.
கடுமையான சுற்றிவளைப்புத் தாக்குதலுக்கு உள்ளாhகியிருந்த நிலையில் – உதவிக்கு அனுப்பிய –‘கொமாண்டோ’க்களுக்கு உதவி தேவைப்பட்டது! 19 ஆம் திகதி காலை, அடுத்த தொகுதி கொமாண்டோக்கள் வான்வழி மூலமே தரையிறக்கப்பட்டனர்; கடல்வழி உதவி வழங்கல் சாத்தியப்படவில்லை. அன்று மாலை 4.30 மணிக்கு, ‘திரிவிட பகர’ வில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ‘ரணவிரு’ பீரங்கிக் கடலூர்தி மூழ்கடிக்கப்பட்டது.
20 ஆம் திகதி வான்வழிமூலமான இன்னுமொரு உதவி வழங்கலுக்கு எதிரி எத்தனித்தான். புலிகளின் கடுமையான மோட்டர் எறிகணைத் தாக்குதலில், எம்.ஐ.17 துருப்புக்காவி உலங்குவானூர்தி சேதப்பட்டது, முயற்சி பலிக்கவில்லை, வானூர்திகள் திரும்பின.
21 ஆம் திகதி ‘கிபிர்’ மற்றும் ‘புக்காரா’ வானூர்திகள் மூலமும் கடற்புலிகளின் படகுகள் மீது கடுமையான தாக்குதலை நிகழ்த்தியவண்ணம், தரையிறங்கும் கலம்மூலம் ஒருதொகைக் கொமாண்டோக்கள் தரையிறக்கப்பட்டனர். எனினும், எவ்வித அசைவையும் செய்ய முடியாத இறுக்கமுற்றுகைக்குள் அவர்கள், தொடர்ச்சியான இழப்புக்களையே சந்தித்தனர்.
22ஆம் திகதி எவ்வித வழங்கலும் சாத்தியப்படவில்லை; 23ஆம் திகதி, கரைக்கு வந்த தரையிறக்கும் கலம் மீது புலிகள் மோட்டர் எறிகணை வீசித் தாக்கியதில், அது பலத்த சேதப்பட்டு பின்னுக்கு எடுக்கப்பட்டது. 24 ஆம் திகதிஇ இன்னொரு தரையிறக்கும்கலம், கரும்புலித் தாக்குதலுக்கு அதிர்ஷ்டவசமாகத் தப்பித்துக் கொண்டது.
25 ஆம் திகதியும் கடல்வழியாக மேலும் துருப்புக்களைத் தரையிறக்க முடிந்தபோதும் அவர்கள் தமது நோக்கத்தில் எதுவும் செய்ய முடியாத நிர்க்கதி நிலைக்குள் சிக்குண்டிருப்பதை, எதிரித் தலைமை உணர்ந்தது; அத்தோடு, பெரும் பொறிக்குள் அகப்பட்டு கொமாண்டோக்கள் பெரும் உயிரிழப்புக்களைச் சந்திப்பது மட்டுமன்றி, அவர்களை நிரந்தரமாகவே மீட்டெடுக்க முடியாத பேரழிவு நிகழ்ந்து விடுமோ எனவும் அச்சப்பட்டது. தப்பியோடும் மனநிலையிலேயே இருந்த தன் “மீட்புப்படை” யை, 26ஆம் திகதி, சிங்களத் தலைமை அவதி அவதியாக மீட்டெடுத்தது.
தளம் மீதான தாக்கி அழிக்கும் சண்டைகளிலும், மீட்புப் படைகள் மீதான தடுத்து நிறுத்தும் மற்றும் தாக்கி அழிக்கும் சண்டைகளிலும் – தரையிலும், கடலிலும் 332 புலி வீரர்கள் களப்பலியாகினர்.
தளத்திலிருந்தவர்களில் குறைந்தது 1200 படையினரும், உதவிப் படையினரில் குறைந்தது 100 படையினரும் கொல்லப்பட்டனர்.
தமது படைகளால் புலிகளிடம் இழக்கப்பட்ட சுடுகருவிகள், மற்றும் போர்த் தளபாடங்களின் பெறுமதி 200 கோடி ரூபாக்களுக்கு அதிகம் என்று, சிங்களத் தரப்பிலேயே சொல்லப்படுகின்றது.
24 வயதுடைய தனது போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் இயக்கம் பெற்ற தீர்த்திமிகு பெரும் இராணுவ வெற்றிகளாக, முல்லைத்தீவுச் சமரும் ‘சத்ஜய’ படையெடுப்பை எதிர்கொண்ட சண்டைகளும் திகழ்கின்றன!
நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (ஆவணி – புரட்டாதி, 1996).