‘ஓயாத அலைகள் 01’ நடவடிக்கை
சிறீலங்காப் படைகள் அதியுயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட பெரும் இராணுவத் தளங்களில் ஒன்றாக முல்லைத்தீவு இராணுவத்தளம் இருந்தது. சிங்களமயமாக்கி தமிழீழத் தாயகக் கோட்பாட்டைச் சிதைக்கும் பேரினவாதச் சிந்தனைக்கு நம்பிக்கை நட்சத்திரமாக முல்லைத்தளத்தையும் எதிரி வைத்திருந்தான். சிங்களத்தின் இராணுவக் கனவுகளுக்குப் பேரிடியாக உருவெடுத்துவரும் எமது இயக்கத்தின் கடற்புலிகளின் நகர்திறனைக் கட்டுப்படுத்தக் கூடியதாக, முல்லைத் தளத்தின் அமைவு இருந்தது. அதனால், கடல்வழி விநியோகத்தை மட்டுமே நம்பியிருந்த வடபகுதி ஆக்கிரமிப்பு வலயத்தின் உயிர்நாடி என்ற கேந்திர முக்கியத்துவத்தை அது பெற்றுவிட்டது. இத்தனை அரசியல், இராணுவ முக்கியத்துவங்களின் வெளிப்பாடாக, அதியுயர் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டதாக, முல்லைத்தீவு இராணுவத்தளம் எதிரியால் அமைக்கப்பட்டிருந்தது.
அத்தகைய அதியுச்சப் பாதுகாப்பு ஏற்பாடுகளைக்கொண்ட வலுவான முல்லைத் தளத்தை அழித்தொழிப்பதென, எமது தேசியத்தலைவர் அவர்கள் முடிவுசெய்தார். அன்று நிலவிய அரசியல், இராணுவச் சூழ்நிலையில் தலைவர் எடுத்த இம்முடிவானது முக்கியத்துவம் வாய்ந்த திருப்பங்களை ஏற்படுத்தக்கூடிய நிலையிலிருந்தது.
‘சூரியக்கதிர்’ நடவடிக்கைகள்மூலம் சிறீலங்கா, யாழ் குடாநாட்டைத் தன் முழுமையான ஆக்கிரமிப்பிற்குட் கொண்டுவந்தது. அதுவரை எமது போராட்டத்தின் அரசியல், இராணுவ மையமாக விளங்கிய யாழ்க் குடாநாட்டைப் புலிகளியக்கம் இழந்தமை, அவர்கள் ஒழித்துக்கட்டப் படக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள் என்ற சிங்களத்தின் பரப்புரைக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது. இதன்மூலம், எமது மக்கள் மத்தியிலும் சர்வதே மட்டத்திலும் எமது போராட்டம்மீதான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்திவிடும் நாசகார முயற்சியிற் சிங்களம் ஈடுபடமுடிந்தது. “விடுதலைப் புலிகளின் 90% பலம் அழிக்கப்பட்டு விட்டது. ஏனையவர்கள் வன்னிக் காடுகளுள் பதுங்கியிருக்கிறார்கள். அவர்களையும் எமது படைகள் விரைவில் அழித்துவிடும்” எனச் சிறீலங்காவிற்கு பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் சூளுரைத்தபடி இருந்தனர். இந்நிலையில், எமது விடுதலை இயக்கத்தின் இராணுவப் பலத்தை வெளிப்படுத்தி, சிறீலங்காவிற்கு வாய்ப்பாக அமைந்திருந்த சூழலில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, உலக வரலாற்றில் அதிசயங்களை ஏற்படுத்தவல்ல பெருஞ்சமர் ஒன்றிற்கான ஏற்பாடுகளில் எமது இயக்கம் ஈடுபட்டுகொண்டிருந்தது.
சுமார் 1500 இற்கு மேற்பட்ட படைவீரர்களையும் மரபுவழித் தாக்குதல்களுக்கு தேவையான அதிநவீன ஆயுதங்களையும் கொண்டிருந்த முல்லைத்தளம், அதில் நிலைகொண்டிருப்பவர்களுக்கு இயற்கையான பாதுகாப்பை வழங்கக்கூடிய பூகோள அமைப்பைக் கொண்டிருந்தது. பெருங்கடல், நீரேரி, சதுப்புநிலம் வெட்டைவெளிகள் என எமது ஊடுவலைத் தடுக்கவல்ல இயற்கை அரண்கள் முல்லைத் தளத்திற்கு இருந்தன. இவற்றைவிடவும் எதிரி தன் இராணுவ நுணுக்கங்களைப் பயன்படுத்தி, பலவகையான மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவைத்திருந்தான். இத்தகைய போர்வலு நிறைந்த படைத்தளம் ஒன்றின்மீது சந்தேகத்திடமற்ற வெற்றியொன்றைப் பெறுவது, நீண்டதும் கடினமானதுமான அடிப்படைப் போர்த்தயாரிப்பு வேலைகளிலேயே தங்கியிருந்தது. இதில் அதீத அக்கறை எடுத்த தலைவர், தானே நேரடியாக நின்று திட்டமிடலின் அனைத்து முனைகளையும் ஒழுங்கமைத்தார்.
மிக நீண்ட வேவு நடவடிக்கையொன்று முல்லைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்டு, கணிசமான பகுதி நிறைவுசெய்யப்பட்டது. எமது அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவரான தளபதி பிரிகேடியர் தீபன் அவர்களின் கீழ், ஆற்றல்மிக்க வேவுப்படையொன்றைத் தலைவர் அவர்கள் இதற்காக நியமித்தார். “எந்தப் பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும்” என்ற தலைவரின் சிந்தனையை வேவுக்கான அடிப்படைத் தத்துவமாகக் கொண்டிருந்த எமது வீரர்களால், முல்லைத் தளத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சல்லடை போடப்பட்டன. நீண்ட கடினமான இந்த வேவுப் பணியிற் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் போராளிகளைக் கொண்ட வேவு அணியொன்றும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டு, வெற்றியின் அடிக்கட்டுமானத்திலேயே அர்ப்பணிப்பு நிறைந்த தன் உழைப்பைச் செலுத்தியது.
சமருக்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, தாக்குதல் அணிகள் கடுமையான பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. சமருக்கான திட்டமிடலில் அணுவணுவாகக் கண்காணித்து அயராது உழைத்த தலைவர், புலிகளின் பலத்தை உலகிற்கு ஓங்கி உரைக்கப்போகும் எமது ‘ஓயாத அலைகள் – 01’ நடவடிக்கையின் இதயமான, முக்கியத்துவம் வாய்ந்த பணிகளைச் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியிடம் அசையாத நம்பிக்கையுடன் ஒப்படைத்தார். முல்லைத்தீவுப் படைத்தளப் பிரதான ஆட்லறி நிலைகளைக் கைப்பற்றுவதும், பிரிகேட் தலைமையகத்தைக் கைப்பற்றுவதும் எமது படையணியிடம் வழங்கப்பட்ட பிரதான பணிகளாகும்.
திட்டமிடலுக்கு ஏற்பவே எமது படையணி மூன்று அணிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. முதலாவது அணி முல்லைத் தளத்தின் வடபகுதியூடாக எதிரியின் ஆட்லறி நிலைகளைக் கைப்பற்றுவதும், இரண்டாவது அணி, எதிரியின் பிரிகேட் தலைமையகத்தைக் கைப்பற்றும், மூன்றாம் அணி எதிரியின் உடைக்கப்பட்ட முன்னரங்க நிலைகளில் மேலும் காவலரண்களைக் கைப்பற்றி மற்றைய பாதைகளுடாக வரும் படையணிகளுடன் இணைந்துகொள்ளும்.
பிரதான முகாமைப் பொறுத்தவரை அது உச்சப் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டிருந்தது. தளத்தின் முதற்கட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகளாக, கம்பித்தடைகள் அமைத்து, மிதிவெடிகளையும், கண்ணிவெடிகளையும் விதைத்து, சூட்டுவெளிகளையும் கண்காணிப்பு நிலைகளையும் ஏற்படுத்தி, வலுவான முன்னணிப் பாதுகாப்பு வேலியை அமைத்து வைத்திருந்த எதிரி அவற்றை மின் விளக்குகள் மூலம் ஒளியூட்டி வைத்திருந்தான். இவற்றைவிடவும் மேலும் பல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இத்தகைய பலமான முன்னணிப் பாதுகாப்பை உடைத்து, பிரதான முகாமிற்குள் நுழையும் எமது அணிகள் அங்கு மேலும் பல தடைகளைச் சந்திக்க வேண்டும். அங்கு முன்னணி நிலைகளைப் போலவே மூன்று நான்கு வலயங்கள் எதிரியால் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றுள் ஆயிரக்கணக்கில் மிதிவெடிகளை எதிரி விதைத்து வைத்திருந்தான். உள்ளேயிருந்த ஒவ்வொரு வீடும் கட்டடமும் எதிரிகளின் காவல் நிலைகளாக மாற்றப்பட்டிருந்தன.
இத்தனை தடைகளையும் உடைத்தெறித்து சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியினர் வெற்றியை உறுத்திப்படுத்துவர் என்று தலைவர் அவர்கள் நம்பிக்கை வைத்ததுபோலவே படையணியின் போராளிகள் ஒவ்வொருவரும் தமது வீரத்தில் நம்பிக்கை கொண்டிருந்தனர் கடுமையான பகுதியிற் சண்டையிடுவதில் உள்ள ஆர்வம் எல்லாப் போராளிகளின் மனத்திலும் உத்வேகத்தை அளித்தது.
17.07.1996 அன்று நள்ளிரவுப் பொழுது. தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நேரடிக் கட்டளையில் தளபதி பிரிகேடியர் தீபன் களத்தை வழிநடத்த, தேசியத் தலைவரின் நேரடி நெறிப்படுத்தலில் அந்த வரலாற்றுப் புகழ்மிகு சமர் மூண்டது. களமிறக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியிடமிருந்து வெற்றிச் செய்திகளே வந்துகொண்டிருந்தன. மிகக் குறுகிய நாட்களுட் புலிகளியக்கம் பெரும் போரியற் சாதனையைச் செய்துமுடித்தது.
படையினரில் ஏறக்குறைய 1200 பேரை ஒரே தடவையில் கொன்றழித்த ‘ஓயாத அலைகள் – 01’ தாக்கியழிப்புச் சமர் எதிர்பார்க்கப்பட்டது போலவே எமக்குச் சாதகமான இராணுவ, அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தியது. இவ்வரலாற்றுச் சமரிற் பங்ஙெடுத்துப் பெருமை பெறும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தமிழீழப் போர் வரலாற்றிற் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய இன்னொரு சாதனையையும் நிலைநாட்டியது. தலைவரால் உருவாக்கப்பட்ட முதலாவது மரவுவழிப் படையணி, புலிகளியக்கத்தின் மரபுசார் போரியலைப் புதிய வீச்சிற்கு இட்டுச்செல்லவல்ல இரண்டு ஆட்லறிப் பீரங்கிகளை ‘ஓயாத அலைகள் – 01’ நடவடிக்கையிற் கைப்பற்றியமையே அச்சாதனையாகும். இதில் வேறு படையணிகளின் பங்களிப்பும் இருந்தமை குறிப்பிடப்பட வேண்டியதாகும். தமிழீழப் போராட்ட வரலாற்றில் முதன்முதலிற் கைப்பற்றப்பட்ட இந்த ஆட்லறிப் பீரங்கிகளைக் கொண்டு புலிகளின் எதிர்காலப் போரரங்கிற் பாரிய வளர்ச்சிக்கு வித்திட்ட பெருமையைச் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி ‘ஓயாத அலைகள் – 01’ இல் தன் சாதனைகளில் ஒன்றாக உள்ளடக்கிக்கொண்டது.
லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் “வென்று வந்த வரலாற்றின் ஒரு சகாப்த வரிகள்” எனும் கள வரலாற்று தொகுப்பிலிருந்து…
எழுத்துருவாக்கம்: அ.பார்த்திபன்.
நன்றி – நெருப்பாற்று நீச்சலிற் பத்தாண்டுகள்.