புலிகளை வாழ்த்துவோம்
புத்தெழில் கொஞ்சும் தமிழீழத்தில்
தித்திப் பளிக்கும் முஸ்லீம் சிறுவரின்
முத்தம் வாங்கி முழங்கு போர்க் களத்தே
இத்தமிழ் விடுதலைப் புலி எழுகின்றான்….
எங்கள் சிறிய பிள்ளைகள் எழுச்சி
பொங்கிப் படைக்கும் புலிகள் தோளில்
தொங்கி ஆடத் துடிக்கும் காலம்…
மதங்கள் வேறுதான் மனங்கள் நூறு
விதங்களா? இல்லை! தமிழினம் ஒன்றே!
கற்றவர் மலிந்த கலையாழ் மண்ணும்
அற்புத மீனிசை அமைந்த தேனாடும்
நெற்கதிர் குலுங்கும் வன்னி நிலமும்
நற்றமிழ் முதுபுகழ் மாந்தை நன்னாடும்
உற்ற கோணமா மலையும் மக்கள்
பற்றிவாழ் காத்தான் குடிப்பட்டணமும்
கற்குடாக் கடலும் நாட்டுக் கவிதை
முற்றிப் பழுத்த அக்கரைப் பற்றும்
விற்பனை மடுவின் விரிந்த காடும்
பற்றிப் பறிக்க எண்ணிய பகைவர்
நெற்றி பிளந்த நெருப்பின் புலிகளை
நற்றமிழ் ஈழ நாடு மறக்குமோ?
கழுத்தில் நஞ்சு கட்டிய தமிழர்
நிலத்தின் புலிகளை நெஞ்சால் வாழ்த்துவோம்!
– கவிஞர் காசி ஆனந்தன் –