அத்தியாயம்:01
தமிழ்த் தேசிய எழுச்சியும் ஆயுதப் போராட்டமும் …!
விடுதலைப் புலிகளின் போராட்டக்களம் – பாகம் -03
காயமடைந்த புலிவீரர்கள் மூவரையும் சிங்கள ஆயுதப்படையினரின் கெடுபிடிகள் சோதனைகளுக்கும் மத்தியில், தமிழகத்திற்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தவனும் அவனே.
ஆயுதமேந்திய எதிர்ப்பு இயக்கத்தின் ஆரம்பகால வளர்ச்சிக் கட்டத்தில் தலைசிறந்த தாக்குதற் தளபதியாக விளங்கிய சங்கர் சிங்கள ஆயுதப் படையினரின் தீவிர வேட்டைக்கு இலக்காயிருந்தான். விடுதலைப் புலிகளின் தங்குமிடம் பற்றிக் கிடைத்த தகவலை அடுத்து, 1982 நவம்பர் 20 அன்று, யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள வீடொன்றை இராணுவத்தினர் சுற்றி வளைத்தனர்.
அவ்வேளை அங்கிருந்த சங்கர், முற்றுகையிட்ட இராணுவத்தினரைத் தனது கைத்துப்பாக்கியால் சுட்டவாறு தப்பியோட முயற்சிக்கிறான். வீட்டு மதிலை தாண்டிக் குதிக்க முயற்சித்த பொழுது, இராணுவத்தினர் அவன்மீது சரமாரியாக வேட்டுக்களைத் தீர்த்தனர், வயிற்றில் குண்டு பாய்ந்து காயமடைந்போதும், சுற்றிவளைப்பை உடைத்துக்கொண்டு அவன் தப்பி ஓடினான். காயமடைந்த சங்கரைச் சிகிச்சைக்காக தமிழகம் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதும் இராணுவ சோதனைகள் தீவிரமாகியிருந்ததால் தாமதம் ஏற்படுகிறது. இறுதியாக, 5 நாட்களின் பின்பு, கடல் மார்க்கமாக அவன் வேதாரணியம் கொண்டு செல்லப்பட்டு, பின்பு அங்கிருந்து மதுரை சென்றடைய சங்கரின் உடல்நிலை மோசமடைகிறது. தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் ஆபத்தான கட்டத்தை அடைந்தான்.
அப்பொழுது தலைவரைச் சந்திக்க வேண்டும் என்ற தனது இறுதி ஆசையை வெளியிட்டான். அதிர்ஷ்டவசமாக, அவ்வேளை பிரபாகரன் மதுரையில் இருந்தார். பாண்டி பஜார் துப்பாக்கி மோதல் சம்பவத்தை அடுத்து, நிபந்தனைப் பிணையில் தங்கியிருந்த பிரபாகரன் சங்கர் சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கு விரைந்தார். உயிர் பிரிகின்ற இறுதி நேரம். தலைவனின் மடியில் தலைசாய்ந்தவாறு சாவைத் தழுவிக் கொள்கிறான் சங்கர், 1982 நவம்பர் 27 அன்று, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது மாவீரன் என்ற வரலாற்று முக்கியத்துவம் பெற்று அவன் மரணித்தான். சங்கர் வீரச்சாவடைந்த அன்றைய நாள், மாவீரர் நாளாக, தமிழரின் தேசிய எழுச்சி நாளாக, ஒரு புனித நாளாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழ் மக்களுக்கு எதிரான அரச ஒடுக்குமுறை 1982 பிற்பகுதியில் ஒரு குரூர வடிவம் பெற்றது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தமிழ் அறிவு ஜீவிகளுக்கும், மத குருமாருக்கும் எதிராக அரசு திருப்பியது. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தார்கள் என்ற குற்றச்சாட்டோடு, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மருத்துவர்கள், பெயர் பெற்ற கத்தோலிக்க குருமார் போன்றோர் கைது செய்யப்பட்டார்கள். திரு.மு. நித்தியானந்தன், அவர் மனைவி நிர்மலா ஆகிய இருவரும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்.
இவர்களோடு கலாநிதி ஜெயக்குலராஜா, அவர் சகோதரர் அருட்திரு ஜெயதிலகராஜா ஆகியோரும் அவர்களுடன் மதிப்புப்பெற்ற இரண்டு கத்தோலிக்க குருமாரான பி.சின்னராஜா, ஏ.சிங்கராயர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார்கள். இந்தச் சம்பவத்தை ஆட்சேபித்து விடுதலைப் புலிகள் உலக அரங்கில் ஒரு பரப்புரைப் போராட்டம் நடத்தினர். இந்த மனச்சாட்சிக் கைதிகளை விடுவிக்கும்படி உலக முன்றலில் கோரிக்கை விடுக்குமாறு, தங்கள் அனைத்துலகக் கிளைகளைப் பணித்தனர்.
அணிசாரா நாடுகளின் ஏழாவது உச்சி மாநாடு புதுடில்லியில் 1983 மார்ச் 7-15 தேதிகளில் நடைபெற்ற வேளை, விடுதலைப் புலிகள் இயக்கம் மகஜர் ஒன்றை இம்மாநாட்டில் சமர்ப்பித்தது. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்தும் இயக்கமாக விடுதலைப் புலிகள் முதற் தடவையாக அனைத்துலக அரங்கில் தம்மைக் காத்திரமாக அடையாளப்படுத்தினர். தேசிய விடுதலைக்கான தமிழரின் போராட்டம் என்ற தலைப்பில் இந்த அறிக்கை வரையப்பட்டிருந்தது. ஆயுதப் போர் தோற்றம் பெற்றதன் வரலாற்றுப் பின்னணியை விடுதலைப் புலிகளின் இந்த அறிக்கை, பின்வரும் கருத்தோட்டத்தில் விளக்கியது.
“எழுபதுகளின் முற்பகுதியில் தமிழீழ மக்களின் ஆயுதம் தரித்த எதிர்ப்புப் போராட்டம் வரலாற்றுப் பிறப்பை எடுத்தது. சனநாயக வழி தழுவிய வெகுசனப் போராட்ட வடிவமாக மேற்கொள்ளப்பட்ட தேசிய விடுதலை இயக்கம் தோல்விகளைச் சந்தித்ததோடு, சமாதான வழியில் மக்களை அணிதிரட்டும் தார்மீக வலுவையும் இழந்து போனது. இந்நிலையே, ஆயுதப் போராட்டத்திற்கு வழிகோலியது. அரச பயங்கரவாதத்தின் மிருகத்தனமான ஒடுக்குமுறைக்கு எதிராக, தமிழ் மக்கள் தம்மைப்
பாதுகாத்துக் கொள்வதற்கு வேறுவழி இல்லாததால் புரட்சிகர ஆயுதப்போர் வடிவத்தைத் தேர்ந்தெடுக்க அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஆகவே, தமிழரின் ஆயுதப் போராட்டமானது, தாங்கொணா அரச ஒடுக்குமுறையின் வரலாற்றுக் குழந்தையாகப் பிறப்பெடுத்தது. ஒடுக்கப்பட்டு வரும் எமது மக்களின் அரசியற் போராட்டத்தினது தொடர்ச்சியாகவும், நீட்சியாகவும், முன்னெடுப்பாகவுமே ஆயுதப் போராட்டத்தைப் பார்க்க வேண்டும். தமிழீழத்தில் புரட்சிகர ஆயுதப்போரை முன்னெடுத்து வரும் எமது விடுதலை அமைப்பானது, எமது தேசியப் போராட்டத்தின் முன்னணிப் படையாக இயங்குகின்றது.
எமது போராட்டத்தின் யதார்த்த புறநிலையை மிகக் கவனமாகக் கணிப்பிட்டு, தேச சுதந்திரத்தை முன்னெடுப்பதற்குத் தீவிரமாகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற வரலாற்று உண்மையை உணர்ந்த பின்னரே ஆயுதப் போராட்ட வடிவத்தை வகுத்தோம். எமது விடுதலை இயக்கத்தின் ஆயுதப் போராட்டத்திற்குத் தமிழ் மக்களின் பரந்துபட்ட ஆதரவுண்டு. சிங்கள அரசின் எதேச்சாதிகார ஆதிக்கத்தையும் அடக்குமுறையையும் எதிர்த்து நின்று அரசியல் சுதந்திரத்தை வென்றெடுக்க வேண்டும் என்ற எமது மக்களின் ஆழமான அபிலாசையை எமது போராட்ட இலட்சியம் வெளிப்படுத்தி நிற்பதால் மக்கள் சக்தி எமது இயக்கத்தின் பின்னால் அணிதிரண்டு நிற்கிறது”.
– சிறீலங்கா அரசின் இன அழிப்பு ஒடுக்குமுறைக் கொள்கையைக் கண்டித்து, தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் இயக்கம், தனது மகஜரில், இந்திய அரசையும் அணிசாரா நாடுகளின் தலைவர்களையும் வேண்டிக்கொண்டது.
அடுத்து வரும் பதிவு : வன்முறைப் புயல் வீசிய ‘கறுப்பு ஜுலை’
“போரும் சமாதானமும்” என்ற நூலிருந்து ஈழப்பறவைகள் இணையம். முடிந்தவரை எமது வரலாறுகளை அடுத்த சந்ததிகளுக்கு கடத்துவோம்.