ஈரம் வற்றிய இரு விழிகள்
கறள் படிந்த ஈழக்
கம்பிக்கூடுகளுக்குள்
என் கைகள் சடுதியாய்
அகப்பட்டிருக்கின்றன.
ஓ என் தேசக் காதலை
எங்கே நான் கதறியபடி
விட்டெழுந்து தேடுவதோ?
விழித்துக் கொண்டிருக்கும்
கண்களைக் காயப் படுத்த
கைகளை உயர்த்தி
சிலர் தயார் படுத்துகிறார்கள்
உடைந்து கிடக்கும் கால்களை
சேதப்படுத்த அவர்கள்
சிந்தைகளை சீரோடு
கூர்மையாக்குகிறார்கள்
இரத்தத்தில் சிவந்திட்ட
என் நிலப்பரப்பு
மண்களில் வீடமைத்து
சூரையாடுவதற்காகவே
காத்துக்கிடக்கிறார்கள்
கலங்கின இதயத்தினை
கலகப்படுத்த வேண்டியே
சொற்களைத் தூவி
கருத்திடவே எண்ணிக்கிறார்கள்
ஈரம் வற்றிப்போன
என் இரு விழிகளில்
உதிரம் சிந்துவதை
இவர்கள் விரும்புகிறார்களா?
நரம்புகள் சுருளப்பட்ட
என் உடல் கூறுகளில்
சித்திரச் சுவரென்றெண்ணி
விரல்களால் சபிக்கின்றார்களா?
விழுந்து விதைகள்
வீருகொண்டெழுவதை
இவர்கள் மறந்திருக்கக்கூடும்.
முறிந்த வாதில் இருந்து
துளிர்கள் உருவாகும் என்பதை
இவர்களின் ஞானத்திரை
மறைத்திருக்க வேண்டும்.
எது எப்படியோ
என் சிந்தனையில்
சற்றே கறள் படிந்திருக்கிறது
ஆம் அது கவிதையாகவும்
கற்பனைகளைத் தாண்டிய
ஓர் நங்கூரத் தாங்களாகவும்
தினம் தினம் உருவாகின்றது
வன்னியூர் கிறுக்கன்