2009 மே மாதம்…. ஒரு குழந்தையின் மரணம்.
விரிந்து கிடக்கிறது
ஆகாயவெளி….
ஒற்றைப் பறவையொன்று
உட்கார்ந்திருக்கிறது மரக்கிளையில்…
சின்னச்சின்ன மழைத்துளிகள்
நிலத்தில் விழுகின்றன ….
தூரத்தே ஒருகாவலரண்
உடைந்து வீழ்ந்திருக்கிறது..
கண்களும் கைகளும்
கட்டப்பட்ட உடல்களின்மீது
ஈக்கள் மொய்த்துக்கொண்டிருக்கின்றன…
புல்லாங்குழலின் கண்ணீராய்
நிராதரவான பெண்ணொருத்தி
ஈனமாய் அழுங்குரல்….
கரங்களைக் குவித்து
புன்னகை பெருக்கி
வெள்ளுடையில்
அரசின் தலைவன்….
இரும்பை உருக்கி
செவிகளுள் ஊற்றியதுபோல
யாரோசிலரின் சிரிப்பு….
நெஞ்சுத்துளைகளிலிலிருந்து
குருதி வடிய
மண்ணிற் கிடக்கிறான்பாலகன்.
மல்லாந்து கிடக்கும்
அவன்முகத்தில் வலிகளில்லை
வழிகிறது குழந்தைமை.
– ஆதிலட்சுமி சிவகுமார்_