நாங்கள் எப்போதோ இறந்து விட்டோம்
இப்போதிருப்பது உயிரா உடலா?
சிதறிக்கிடந்த சதை துண்டங்கள் மீது
பதித்த காலின் ஈரம் இன்னும் காயவில்லை
அறுந்து கிடந்த அங்கங்களை அளைந்த
கைகளில் குருதி வாடை இன்னும் போகவில்லை
ஒட்டிய வயிற்றுடன் ஒருவேளை
கஞ்சிக்கழுத காட்சிகள் இன்னும் மறையவில்லை
உயிர் போகும் வலியின் ஓலங்கள்
காதை விட்டு இன்னும் போகவில்லை
உயிர் இழந்த உறவுகளின்
கண்களின் ஈரங்கள் இன்னும் காயவில்லை
முத்தமிடும் மழலைகள்
செத்துக்கிடந்த காட்சிகள்
போகும் இடமெல்லாம்
மரணத்தின் ஓலங்கள்
பார்க்கும் இடமெல்லாம்
பற்றியெரிந்த காட்சிகள்
இப்போதும் கண்முன்னே !
நாங்கள் எப்போதோ இறந்து விட்டோம்
இப்போதிருப்பது உயிரா உடலா?
Dr.து.வரதராஜா