வலி சுமந்த இனம்
ஆண்டுகளாண்டாய் ஆண்ட நம்மினம்
அடங்கி இன்று முடங்கியே கிடக்குது
அல்லும் பகலும் கண்ட கனவுகள்
கசங்கியே இன்று கண்ணீர் வடிக்குது
நீதியும் நேர்மையும் காத்த நம்மினம்
நீதிக்காய் இன்று ஏங்கித்தவிக்குது
வலிமையோடன்று வாழ்ந்திட்ட நம்மவர்
வலிகளை சுமந்து நலிந்தவராயினர்
வீரமும் வெற்றியும் கண்ணெனக்கொண்டு
களத்தினில் நம்மவர் காத்துக்கிடக்கையில்
கலக்கமும் கவலையும் கணத்திலுமில்லை
கயவரை எண்ணிநாம் துடிக்கவுமில்லை
உரிமையை வேண்டியே குரலது கொடுத்தோம்
உயிரினைக்கொடுத்தும் விடிவுகளில்லை
குருதியை சிந்திநாம் குலத்திற்கேயிறைத்தோம்
குலவிளக்குகள் கூட குதறியே சிதைந்தனர்
ஆண்மையும் பெண்மையும் உச்சமாய் காத்தும்
துச்சமாய் நம்மவர் துகில்களையுரிய
எச்சமாய் இருந்தநாம் ஏங்கித்தவித்தோம்
பிச்சையாய் கூட நம் மானம் கேட்டோம்
பூத்துச்சிரித்த நம் புன்னகைதேசம்
புகைமண்டலமாகி பொங்கி வழிந்தது
நந்திக்கடலது செந்நீரானது
மாண்டவர் சடலம் பாலமமைத்தது
பிஞ்சுகளெல்லாம் பசியில் துடித்திட
கஞ்சிக்கு நம்மவர் கைகளையேந்திட
வஞ்சிக்கவந்த குண்டுகளெல்லாம்
பசித்த வயிற்றினை புசித்துச் சென்றன
தாயவள் இறந்து மண்ணில் கிடக்கையில்
வற்றிய முலையில் பசியாறிய மகவும்
தோளினில் சுமந்த தந்தையின் உடலை
கால்களால் கடந்து தவித்த குழந்தையும்
எண்ணற்ற வலிகள் நெஞ்சினை நிறைக்குது
கண்களில் நீரோ ஆறாய் ஓடுது
ஆறாதவலிகள் ஆழமாய் கிடக்குது
வலிகளை சொல்லியும் விடிவுகளேதோ???
வன்னியூர் மகள்