கொத்து குண்டு நடுவே
தீக்குளித்தோம்…!
கருமேக இருள் சூழவில்லை
கந்தக இருள் சூழ்ந்த தேசம்
கொத்து குண்டு நடுவே
தீக்குளித்தோம்
பிறந்த மண்ணில் நாங்கள் அகதி
வாழ்ந்த இடங்களும் வாடைகையாய்
ஆண்ட தமிழினம் அடிமை வாழ்வில்
செந்தீயில் சிவந்தது தேசம்
சிகரம் தொட எழுந்த தமிழன்
செங்குருதியில் நனைந்தான்
உயிர் கொடுத்து காத்த தேசம்
வஞ்சனையின் சதியில் வீழ்ந்தது
கண்ணீரில் நனைந்தோம்
காவியம் படைக்க நடந்தோம்
கருவிகள் சுமந்த தோள்களும்
களம் அளந்த கால்களும்
போர் நெறி தவறிய
கயவர் கூட்டத்தின்
நயவஞ்சகத்தில் வீழ்ந்தது
தேசம் காக்க நடந்த வீரம்
தேகம் அடங்கி வீழ்ந்தது மண்ணில்
தாய் நிலத்தை முத்தமிட்டு
உயிர்களின் ஓலம் கடல்
அலையாக எழுந்தது
முள்ளிவாய்க்கால் முற்றம்
உயிரற்ற உடல்களால்
நிறைந்து கிடந்தது
கொத்து குண்டுகள் வீசிய கோழைகள்
கூவி கூக்குரல் இட்டது
சொந்தம் இழந்து சோகம் சுமந்து
உறவுகள் இங்கே அழுதது
முள்ளிவாய்க்கால் மண்ணே
இன்னும் முற்று பெறவில்லை
உயிர் வலி சுமந்த எங்களின் வாழ்வு
உறவுகள் பிரிந்த அவலத்தின்
குரல்களால் நிலையிழந்து தவிக்குது
முள்ளிவாய்க்கால் மண்
எண்ணில் அடங்காத உயிர்களை சுமந்து
நினைவழியாத தேசமாய்
முற்று பெறாத எச்சமாய்
இன்னும் எம் நினைவுகளில்
சிவா TE