இன்றைய நாளில் 2009 என்ன நடந்தது தெரியுமா…?
பேரவலம் நடந்து வெறும் 18 மணி நேரம் கடந்திருக்கும்
நரிகளும் கழுகுகளும் எங்கள் தேசத்தையும் எங்களையும் மெல்லவாய் தின்று கொண்டிருந்தது
பூகம்ப நாட்டில் எங்கள் புழுதி படிந்த ஆயுதங்கள் பரவி கிடந்தன
எங்கள் கனவு தேசம் கலைந்து கிடந்தது
ஒரு காவலும் அற்று
எங்கள் எல்லைகள் எல்லாம் மரணப்பொறிகளாய் மாறி கிடந்தது
தலை உயர்த்தி பார்க்க தெரிந்தது எல்லாம் கையும் காலும் கழுத்தும் கழன்ற பாகங்களும்
வஞ்சிக்க பட்ட இனத்தின் தலைப் பிள்ளைகள் நாம் அங்கே சிதறி கிடந்தோம்
நீங்கள் போங்கோ நாங்கள் போராடி தான் சாவோம் என்றவர்கள் சாக முடியாத கைதுகள் செய்யப் பட்டோம்
சபிக்க பட்டு விடப் பட்ட பிள்ளைகள் எங்கே சொல்லி அழுவோம் எம்மை கடந்து கொண்டு இருந்தது எங்கள் இனம்
ஒற்றை தலைவனை நம்பி ஓராயிரம் வெற்றிகள் தந்தோம் எம் இனத்தை காக்க
ஆனால் கடைசியில் அந்த இனத்தால் கைவிடப்பட்டு காயங்கள் சுமந்தும் கால் கை இழந்தும் அழுந்தி செத்து கொண்டு இருந்தோம்
நடந்து செல்ல முடியா தூரத்தை எல்லாம் ஏன் நீங்கள் நினைக்க முடியாத வெற்றிகளை எல்லாம் உங்களுக்கே சமர்ப்பித்து வலிகளை தாங்கி கொண்டு இருந்தவர்கள் நாங்கள்
நீங்கள் எங்களை கடந்து செல்லும் போது தான் நாங்கள் நிமிர்ந்து பார்த்தோம் தொலைவில் சென்று விட்டீர்கள் கூப்பிடும் குரல் வரவும் இல்லை வல்லமையும் இல்லை
உங்கள் கண் முன்னால்
தான் எங்கள் கைகள் கட்டப்பட்டது
எங்கள் கால்கள் கட்டப் பட்டது
கற்பும் பறிக்க பட்டது
ஆண்களும் பெண்களுமாய் ஆடை அவிழ்க்க பட்டு அம்மணமாய் நின்றோம் மறந்து இருக்க மாட்டிர்கள்
அடி வயிறு கலங்கி தான் எம்மை கடந்து இருப்பீர்கள் அது மட்டும் உண்மை
ஒன்று நினைவில் கொள்ளுங்கள்
ஒற்றை கொள்கைக்காய் உருகி செத்தோமே அது வெறும் கனவு அல்ல
ஆயிரம் ஆயிரம் முட்டை வைத்து அண்ணன் அடை காத்த கனவு
சுடு மணலில் தானே புதைந்தோம்
அந்த சூடு எம்மை என்றும் சுட்டு கொண்டு தான் இருக்கிறது
இன்று தான் முட்டைக் கோதுகள் மெல்லவாய் உடைய தொடங்கி உள்ளன
அப்புறம் என்ன அடை காத்த குஞ்சுகள் உடைப்பு எடுக்கும் . அக்கினி குஞ்சுகள் அல்லவா அனைத்தையும் எரிக்கும்
கோடி இன்னல் வந்தும் ஆடி விழாது எங்கள் கோபுரத்து வாசல்
மலையே வந்து எங்கள் முன் நின்றாலும்
மண்டியிடாது எங்கள் மாநகரம்
அன்று அழுகை நிற்கும் சிரிப்பு வரும்
செந்தமிழ் துளிர்த்து கொள்ளும்
செங்கோடி மீண்டும் அசையும்
செயல் எல்லாம் செழுமை பொங்கும்
காத்து இருப்பு என்பது புதியது அல்ல
காரணமாய் காத்து நிற்கிறோம்
காரியம் முடியும் வரை கவனமாயும் இருப்போம் .
காற்று வீசும் எம் பக்கமும்
கவிப்புயல் சரண்.