உணர்வுகள் மட்டுமே போதும் ….!!!
நள்ளிரவு நெருங்கும் நொடிப்பொழுதில்
நடுவயலில் இருக்கும் காவற்குடிலில்
இன்றும் முணுமுணுக்கப்பட்டது ;
´´ஓ மரணித்த வீரனே ……..´
கண்டி வீதியில் பயணித்து
கனகபுரம் நோக்கி விரையும் மகிழுந்தில்
திடீரென்று குறைக்கப்படுகிறது
திரையிசைப் பாடல் ஒலி…….!
தூர்க்கப் பட்டிருக்கிறது ´´துயிலுமில்லம்´´
ஐந்தாம் ஆண்டில் படிக்கும்
அக்காவின் மகன்
அடம் பிடித்து அழுது கொண்டிருந்தான் …
´´ஏன் இப்ப புலி மாமாக்கள் வாறேல்லை´´….?
தடுப்பிலிருந்து வெளிவந்திருக்கும்
தமயந்தி அக்கா
அடுப்புக்கட்டின் கீழ் ஒழித்து வைத்திருந்த
அழகான நினைவொன்றின் அழுக்ககற்றினாள்…….
சிரித்துக் கொண்டிருந்தார் ´´மில்லர் அண்ணா´´
வருவான் என எதிர்பார்த்துக் காத்திருந்து
வராமலே போய்விட்ட ´´செம்பியனுக்காக´´
வன்னி மண்ணின் குடில் ஒன்றில்
காத்திருந்த காதல் கட்டுகிறது மாலை
´´நாளை நவம்பர் 27´´
மாண்டு போகும் எல்லாவற்றையும்
மக்கச்செய்யும் மண்,
விதைகளை மட்டும் உயிர்ப்பித்தல்
வியப்பற்றதெனில்;
உணர்வுகளின் உயிர்ப்பே போதும் …
உறுதியுடன் போராட …!!!
– தேவன் – (2013)