“மீண்டும் துளிர்க்கிறது மாவீரம்”
முடங்கிக்கிடக்கும் தேசத்தில்
முட்கம்பி வேலிக்குள்
சிறைப்பட்ட முற்றத்தை
முறைத்துப்பார்த்தபடி
முணுமுணுத்து நின்றாள்
மூதாட்டி …
முகம்வழிந்தோடிய விழிநீர்..
முத்துப்பற்களெல்லாம்
தொலைந்து போன பொக்கைவாய்…
மூச்சுக்கொரு தடவை
“என்ர குஞ்சுகள்” என்றுரைத்து..
மூச்சிரைக்க முட்டி போட்டு
தொட்டுத்தடவினாள் தாய்மண்ணை …
நாட்டுக்காய் ஈந்த நற்பிள்ளை
இரண்டைக் கட்டியணைப்பதாய்
ஆனந்தம் அவளுக்கு…
பச்சைப் பேய்களுக்கும் பயமின்றி
அச்சமிலாமல் நின்றபடி
மடியிருந்த பையவிழ்த்து
மலரெடத்துத்தூவுகிறாள்
‘மண்’மேலே …..
மழைமேகம் அவளோடு
தானும் தூறியது…
சற்றும் சளைக்காத காற்று
கண்மணிகள் மூச்சைக் காவிச்சுமந்துவந்து பெற்றவள் கால்களைத் தொட்டுத்தழுவியது …
கொற்றவைத்தேவியின் வடிவாய்
வீரமுற்றத்தில் நின்றாள்
அந்தக் கிழத்தி(தீ)
நேற்றிந்த முற்றத்தில்
நூற்றுக்கணக்காய்,
நிரைநிரையாய் உயிர்விதைத்தோம்..
பயிர்வருமென்று பார்த்துப்பார்த்துக்
குருதிபாய்ச்சி உயிர் வளர்த்தோம்..
உறுதி எடுத்துப்போனவர்தம்
மெய்களை மீண்டும் விதைத்தோம்..
உண்மை வளர்த்தோம்…
இன்று எம் கண்முன்னேஅந்த
உத்தமர் உறங்கும் உண்மைநிலம்
உழுது போட்டிருக்கு,
ஊரெரித்த பேய்களினால்…
அந்த ‘வீரநிலம்’ அடைபட்டுக்கிடக்கு
அடக்குமுறைக்கு அடையாளமாய்…
அடிமைப்படுத்தியதாய் இறுமாப்பு
அடாவடிக்காரர்களுக்கு…
அதன்மீது அணிவகுப்புச் செய்யும்
ஆணவம் அவர்களுக்கு…
யாரும் இவர்க்கில்லையென்ற
அலட்சியம் அவர்களுக்கு…
பழகிப்போய்விடும் இவர்க்கென்று
திழைத்துக்கிடக்கிறார்கள்..
அம்மா! என்தேசத்தாயே…!
வீரத்தின் விளை நிலமே..!
உன்மார்பிழந்து அதனுள்ளே உன்வீரப்பிள்ளைகளை
பாசத்தோடுதானே வாரி அணைத்துக்கொண்டாய்…
சோரம்போகா அவ்வீரம்
சொல்லிக்கொடுத்தவள் நீதானே…
ஈரமில்லா நெஞ்சகத்தார்
உனை வன்புணர வரும்போதெல்லாம்
மானம் காத்து நின்ற மறவரவர்…
நேரிய தலைவன் வழிநின்ற
உன் சூரியப்புதல்வர்கள்…
அந்தப் புனிதர்கள் வாழும்
கோயிலுக்கா இந்த நிலை…
காலம் கடக்கிறது…
காற்று நடக்கிறது…
கடலும் வானமும்
கரைந்து போகும் நிலை வரினும்
இன்னமும் காத்துக்கிடக்குது தேசம்..
நீண்டவழிகடந்தும்
நினைந்துருகிக்கிடக்கு தாய்மண்
களங்கமிலா வீரருக்கு
விளக்கேற்ற வழியின்றி
விம்மிக்கிடக்குது தமிழீழம்…
இத்தனை இருந்தும்
ஒளிரும் விளக்குகளால்
மிளிர்கிறது தேசம்…
வீரமாய் நிமிர்கிறது மண்- மீண்டும்
துளிர்க்கிறது மாவீரம்…
விதைத்த உயிர்விதை
விடுதலைப் பயிர்க்கென்றால்,
விடுவிக்கவேண்டயது
விதைத்த விளைநிலம்தான்
விளக்கேற்ற மட்டுமல்ல,
விடுதலை எனும் அறுவடைக்காய்…
-காந்தள்-
27/11/2016