அக்கினிக்குஞ்சின் ஆளுமை….!
அண்ணன் அணி சேர்ந்து
பெண்வீரம் நிலைநாட்டி
மணலாற்றில் வடிவமெடுத்து
மண்மீட்க சீறும் புலியாகி
தலைவனையே குருவாக்கி
வித்தைகள் கற்று தேர்ந்து
பறந்து வந்த சிட்டுகளிற்கு
உறுதியாய் தலமைதாங்கி
களத்திடை வீறுநடைபோட்டு
அண்ணன் பணி நிறைவேற்றி
ஓயாது பொங்கிடும் அலையாகி
நெருப்பாற்றில் தீக்குளித்து
களம் எங்கும் சங்கமித்து
ஆனையிறவில் ஓர் அங்கமாகி
வெற்றிகளிற்கு வித்திட்டு
விடுதலையின் பெருமையாகி
அன்பால் அணியை கட்டியே
கட்டளையிடும் தளபதியாகி
துவண்டுவிழும் வேளையிலும்
தோள் கொடுக்கும் தோழியுமாகி
பாசம் கொண்டு நேசமுமாக
அரவணைக்கும் அன்னையாகி
சிரித்திடும் மழலை முகமாக
வரவேற்கும் பணிவான குணமாகி
களத்திடை காயமுற்றும்
கடமை தவறாத கண்ணியமாகி
சிங்கத்தின் குகைக்குள்ளே
மிரட்டிடும் பெண்புலியாகி
இயற்கையை இரசித்தே
படம்பிடிக்கும் கமராவுமாகி
உலகத்தில் முதலிடமாக
முடிவில்லாத வரலாறுமாகி
யோகத்தில் சங்கமமாகி
முதற்பெண் வீரம் பணிந்து
ஓடி ஓடி நலம் விசாரித்தே
குறை தீர்க்கும் கடவுளுமாகி
காட்டிலே முகாம் அமைத்த
ஓயாத காட்டுக்கோழியுமாகி
கற்றுத் தேர்ந்திடும் ஆற்றலாக
அனைத்தும் அடக்கும் கணணியாகி
பறவைகளுடன் கூடவே சிறகடித்து
திரிந்திடும் சுதந்திரப் பறவையுமாகி
சிறு சிறுத்தைகளுக்கும் அன்னையாக
களமாடும் வேங்கைக்கு சகோதரியாகி
கராத்தேயும் புயலாக கற்றுத்தேர்ந்து
செஞ்சோலையில் இன்புறும் தாயுமாகி
போர்க்களத்திலே ஒரு சேவகியுமாக
பெண் இனம் காத்த பூமாதேவியுமாகி
குறிதவறிடாத நேரான இலக்காக
பலமுறை சாதனைகளின் சிகரமாகி
இரகசியம் காத்திட்ட வேவுப்புலியாக
பகைகண்ணில் மண் தூவும் புலியுமாகி
அண்ணன் சொல்லையே மூச்சாக்க
இறுதிவரை மண்டியிடாத மாவீரமாக்கி
இனமானம் காத்திட்ட அக்கினிகுஞ்சே
இன்னமும் மறையவில்லை உம் வீரம்
வரலாற்று வரிகள்,
ஈழம் வாகீசன்.