எரிந்து முடிந்த வரிகள் …..!
நிலவின் துயரமான ஒருபக்க
இருளினை என்னிடம்
பக்குவப்படுத்தி வைத்ததை
நீ மறந்திருக்க முடியாது
அது அவ்வளவு எளிதல்ல
நட்சத்திரங்களில்
சிதறிய ஒளித் துண்டுகள்
உன் உதட்டில் ஒட்டப்பட்டு
குளிர் காற்று மெல்லியதாய்
உன் குரலை அடைத்திருந்தது
சன்னச் சிதறலின்
சத்தங்களில் செவியறைகள்
சிதைவுற்றிருந்தன
அரும்புத் தாடியின்
கீழ்ப்பக்க நாடியில் இரத்தம்
சிறு மழைத் துளியைப்போல்
கறுப்பு நீள் சப்பாத்தில்
வீழ்ந்து தெறித்துக்கொண்டிருந்தது
உன் இரு கண்களும்
மாலைச் சூரியனின்
கந்தகம் போன்று பிரகாதித்தது
நீ எதிர்காலத்தைக் குறித்து
நீண்டதாய் பேசிக்கொண்டிருந்தாய்
உன் நிகழ்காலத்தைப் பற்றி
பேசுவதற்கு எனக்கு நீ
சந்தர்ப்பம் கொடுக்கவில்லை
அதைப்பற்றியான பேச்சை
ஆரம்பித்தால் புன்னகையோடு
மறுபக்கம் திரும்பிக்கொள்வாய்
உன் சீருடையெங்கிலும்
சில தோட்டாக்களின்
துவாரங்களால் புடமிட்டிருந்தன
உன் முகத்திரையெங்கிலும்
உரிமைத்தீயும் உண்மைத்தீயும்
பற்றியெரிந்து கொண்டேயிருந்தது
எதிர் காலத்தைக்குறித்து
நீ பேசிய வார்த்தைகளை
பக்குவப்படுத்தி மாத்திரமே
என்னால் வைக்கமுடிகிறது
உன் குடும்பத்தின் காதல்
உன் இலட்சியக் கனவு
உன் விடையில்லா மரணம்
என் ஆழமான நட்பு
நிச்சயம் என் எதிர்காலத்தையும்
நான் இழந்திருக்கிறேன்
உன் எதிர்காலத்தைப் பற்றி
தழுவிய நினைவுகளுடன்
வன்னியூர் கிறுக்கன்